சென்னை: பாமக புதிய கொறடாவாக மயிலம் சிவகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது நிலவி வரும் உட்கட்சி பூசல் காரணமாக பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அணியாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு குறிப்பிட்ட நிர்வாகிகளை நீக்கி உத்தரவு பிறப்பித்தார். அவரை மீண்டும் கட்சியில் சேர்த்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உத்தரவு பிறப்பித்து வருகிறார்.
அந்த வகையில், ராமதாஸின் தீவிர ஆதரவாளரான எம்.எல்.ஏ., அருளை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அன்புமணி உத்தரவிட்டார். ஆனால் அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்று ராமதாஸ் நேற்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த நிலையில், பா.ம.க., கொறடா பதவியில் இருந்து எம்.எல்.ஏ., அருளை நீக்க வலியுறுத்தி அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபை செயலரிடம் மனு கொடுத்தனர். அன்புமணி சார்பில் பாமக எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், சதாசிவம், சிவகுமார் ஆகியோர் சபாநாயகரிடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வழக்கறிஞர் பாலு; கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதால் அருள் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாமக சட்டப் பேரவை கொறடா அருள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் புதிய கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் ராமதாஸ் எங்களுக்கு மிகுந்த மரியாதை இருந்தாலும் கட்சியை காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. 1995ல் கட்சி விதிகள் வகுக்கப்பட்டு பாமக செயல்பட்டு வருகிறது. பாமகவில் பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம்.
பாமக கட்சி விதிகளின்படி பொதுக்குழுவை தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்தான் கூட்ட முடியும். தேர்தல் ஆணையம் அளித்த அங்கீகாரப்படி தலைவர், பொதுச்செயலாளர்தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். தேர்தல் ஆணையம் அளித்துள்ள அங்கீகாரப்படி 2026 ஜூன் மாதம் வரை பாமக தலைவர் அன்புமணிதான் என்று கூறினார்.