சென்னை: தமிழக மாணவர்களுக்கு தர வேண்டிய கல்வி நிதி விவகாரத்தில் யார் அரசியல் செய்வது? என ஒன்றிய அமைச்சருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சென்னை கிண்டியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஒன்றிய அரசிடம் மாணவர்களுக்கு வரவேண்டிய கல்வி நிதி ரூ.2,152 கோடி வழங்க கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் அதனை விடுவிக்க மறுத்து புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும், மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறி வருகின்றனர். தமிழகம் மும்மொழி கொள்கைக்கு எப்போதுமே எதிராகத்தான் உள்ளது. இதில் தற்போது அரசியல் செய்வதற்கு என்ன உள்ளது. யார் அரசியல் செய்வது? மொழிப்போருக்காக பல உயிர்களை கொடுத்த மாநிலம் தமிழ்நாடு. தமிழர்களின் உரிமைதான் கல்வி உரிமை; மொழி உரிமை. இவ்வாறு அவர் கூறினார்.