திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே உள்ள கடையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட மின் கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க அமைக்கப்பட்ட நிழற்பந்தலும் உடன் சேர்ந்து தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களிலேயே தீ மளமளவென பரவத்தொடங்கியது. இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கே எரிந்துகொண்டிருந்த தீயை தீயணைப்புத்துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தால் திருப்பதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது. வேகமாக பற்றி எரிந்த தீ, பல கடைகளுக்கும் பரவியது. இதனால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. நள்ளிரவில் இந்த சம்பவம் நடைபெற்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.