கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தனிப்படை போலீசார் பெத்தேல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வேகமாக வந்தவர் நிறுத்தாமல் தப்பிச்சென்றார். இதைத்தொடர்ந்து போலீசார் விரட்டிச் சென்றபோது பைக்கை போட்டு விட்டு ஓடியவரை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கீழகாடுவெட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த சந்திரகுமார் (33) என்பதும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்ட போலீசாரால் தேடப்பட்டு வரும் பிரபல முகமூடி கொள்ளையன் என்பதும், இவர் மீது வீடு, கடைகளை உடைத்து கொள்ளையடித்தல், பைக்குகள் திருட்டு என 70க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து, 3 டூவிலர்கள், அரிவாள், கடப்பாறை, ஸ்குரு டிரைவர், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.