சென்னை: திருமணமான பின் கணவர் வீட்டில் வசிப்பதாலும், பெற்றோரின் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கப்படுவதாலும் ஒரு பெண் பிறந்த வீட்டுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டார் எனக் கூற முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கிராம பஞ்சாயத்து செயலாளர் பதவிக்கு, அந்த கிராமத்தில் அருந்ததியர் தெருவை சேர்ந்த ஜி.மாயக்கண்ணன், பி.சரண்யா ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடிப்படையில் அளிக்கப்பட்ட பரிந்துரையை ஏற்ற வட்டார வளர்ச்சி அலுவலர், சரண்யாவை கிராம பஞ்சாயத்து செயலாளராக நியமித்து 2019 நவம்பர் 28ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். திருமணம் முடித்த சரண்யா கணவருடன் நெய்வேலியில் வசித்து வருவதாகக் கூறி அவரை கிராம பஞ்சாயத்து செயலாளராக நியமித்த உத்தரவை ரத்து செய்து, தன்னை செயலாளராக நியமிக்க உத்தரவிடக் கோரி மாயக்கண்ணன் கடந்த 2021ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, சரண்யா அளித்த சான்றிதழ்களுக்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காத நிலையில், அந்த ஆவணங்கள் போலியானவை அல்ல என்று அரசு கருதுவதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. பஞ்சாயத்து செயலாளர் என்பவர் அவசர பணிக்காக உடனடியாக வருவதை உறுதி செய்வதற்காகவும், உள்ளூர் நிலவரங்கள், தேவைகள், பிரச்னைகளை தெரிந்திருப்பார் என்பதால் தான் உள்ளூரைச் சேர்ந்தவர் என்று குடியிருப்பு சான்றிதழ் தாக்கல் செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறது.
மணமான பெண் கணவர் வீட்டில் வசிப்பதுதான் வழக்கம். கணவர் குடும்பத்தின் குடும்ப அட்டையில் சேர்ப்பதற்காக பெற்றோரின் குடும்ப அட்டையிலிருந்து பெண்ணின் பெயர் நீக்கப்படுகிறது என்பதால் அதன்பின்னர் அவர் பிறந்த வீட்டுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டார் என்று கூற முடியாது.
இன்றைய உலகில், கல்வி வேலைக்காக ஆணும், பெண்ணும் பல்வேறு ஊர்களுக்கு சென்றாலும், தாங்கள் பிறந்த பூர்வீக இடத்தையே நிரந்தர இருப்பிடமாக கருதுகின்றனர். பூர்வீக இடத்துக்கு திரும்புவது என்பது மணமான பெண்ணின் விருப்பத்திற்கு உட்பட்டதுதான் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.