திருவள்ளூர்: திருமணம் செய்ய கட்டாயப்படுத்தி கழுத்தை நெரித்து காதலியை கொலை செய்ய முயன்ற காதலனால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அவமானம் தாங்க முடியாமல் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரை கடந்த ஒன்றரை வருடமாக காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண்ணுக்கு சரவணன் போன்கால் செய்துள்ளார்.
அப்போது, பெண்ணின் தம்பி எடுத்ததால் ஆத்திரம் அடைந்த சரவணன், பெண்ணின் அம்மா மற்றும் தம்பியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் அப்பெண் சரவணனிடம் பேசுவதை நிறுத்திவிட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து, கடந்த 17ம் தேதி மதியம் சரவணன் பெண்ணின் வீட்டிற்குச் சென்று திருமணம் செய்து கொள்ளலாம் வா… என அழைத்துள்ளார். அதற்கு அப்பெண் வரமறுத்து விட்டதால் சரவணன், அவரை அசிங்கமாக திட்டி கழுத்தை நெரித்து சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார். இதனை அக்கம் பக்கத்தினர் வேடிக்கை பார்த்ததால் அவமானம் தாங்க முடியாமல் இளம்பெண் துடித்துள்ளார்.
இதன் விளைவாக தனது தாய் வைத்திருந்த 20 சுகர் மாத்திரைகளை மொத்தமாக சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். திருமணம் செய்ய காதலன் கட்டாயப்படுத்திய நிலையில், அவருடன் செல்ல மறுத்ததால் தன்னை தாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக இளம்பெண் மப்பேடு போலீசாரிடம் நேற்றுமுன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.