வளசரவாக்கம்: சென்னை எம்ஜிஆர் நகர் ஈவிகே சம்பத் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (25). பட்டதாரியான இவர், எம்ஜிஆர் நகர் பாரதியார் தெருவை சேர்ந்த அருண்குமார் என்பவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன், கடந்த ஜனவரி 23ம் தேதி வடபழனியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு, ராஜேஸ்வரி கணவருடன் வசித்து வந்தார். அருண்குமார் வேலைக்காக சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு ராஜேஸ்வரி தனது மாமியார் எல்லம்மாள், மாமனார் சுப்பிரமணி, நாத்தனர் ஹேமமாலினியுடன் வசித்து வந்தார். ராஜேஸ்வரி வளசரவாக்கத்தில் உள்ள சிக்கன் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை அருண்குமார் சிங்கப்பூரில் இருந்து, வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி வந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம், 2 மாதங்களுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கும் அவரது மாமியார் எல்லம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜேஸ்வரியின் பெற்றோர் நேரில் சென்று சமாதானம் செய்து வைத்துவிட்டு வந்துள்ளனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் காலை சிங்கப்பூரில் இருந்த கணவர் அருண்குமாருக்கு, ராஜேஸ்வரி போன் செய்து பேசியுள்ளார். அப்போது, கணவன் -மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு, அருண்குமார் போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. இதனால் அருண்குமார், ராஜேஸ்வரி பெற்றோருக்கு போன் செய்து உடனே வீட்டிற்கு சென்று பாருங்கள் என்று கூறியுள்ளார்.
அதன்படி, ராஜேஸ்வரி வீட்டிற்கு அவரது பெற்றோர் சென்று பார்த்தபோது, ராஜேஸ்வரி தனது அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் குறித்து எம்ஜிஆர் நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி, போலீசார் விரைந்து வந்து ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.திருமணம் நடந்து 8 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், போலீசார் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.