Friday, March 29, 2024
Home » கல்யாணம் நடந்தால் செத்துருவேன்… தாலிகட்டும் முன் திருமணத்தை தடுத்து காதலனை கைபிடித்த மணப்பெண்

கல்யாணம் நடந்தால் செத்துருவேன்… தாலிகட்டும் முன் திருமணத்தை தடுத்து காதலனை கைபிடித்த மணப்பெண்

by Lakshmipathi

*திருமண மண்டபம் சென்று போலீசார் மீட்டனர்

அயோத்தியாப்பட்டணம் : அயோத்தியாப்பட்டணம் அருகே தாலி கட்டும் முன்பு திருமணத்தை மணப்பெண் தடுத்து நிறுத்தினார். காதலன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் காதலியை மீட்டு காதலனுடன் சேர்த்து வைத்தனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டியை சேர்ந்த மல்லிகா மகன் லோகநாதன்(27). எம்பிஏ., பட்டதாரியான இவருக்கும், மின்னாம்பள்ளியை சேர்ந்த சேகர் மகள் சுவேதா(21)வுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தில் மணப்பெண் சுவேதாவிற்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் சுவேதாவை கட்டாயப் படுத்தி திருமணம் நடத்தப்படுவதாக, சுவேதாவின் காதலரான கவியரசன் என்ற வாலிபர், வாழப்பாடி மற்றும் காரிப்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து சேசன்சாவடியில் உள்ள தனியார் மண்டபத்திற்கு கவியரனுடன் சென்ற வாழப்பாடி மகளிர் போலீசார், அங்கு முகூர்த்தத்துக்கு தயாராக இருந்த மணப்பெண் சுவேதாவிடம் விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் சுவேதா, தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என தெரித்துள்ளார்.

இதை கேட்ட மணமகன் வீட்டார் மற்றும் உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து போலீசார் மணப்பெண் சுவேதா மற்றும் புகார் அளித்த காதலன் கவியரசன் உள்ளிட்ட இருவரையும் பாதுகாப்பாக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கவியரசன், சுவேதா இருவரும் ஒரே பகுதியில் அருகருகே வசித்து வருகின்றனர். இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு சுவேதா வீட்டார் சம்மதம் தெரிவிக்காமல், எதிர்ப்பு தெரிவித்து, லோகநாதன் என்பவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று திருமணம் நடைபெற இருந்தது.

அப்போது, சுவேதா, தனது காதலன் கவியரசனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இந்த திருமணம் நடந்தால் தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுவேன் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவியரசன், போலீஸ் உதவி எண் 100க்கு புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து மேஜரான பெண்ணுக்கு விருப்பம் இல்லாமல் நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்தி, பெண்ணை மீட்டதுடன், அவரது விருப்பத்துடன் காதலன் கவியரசுடன் சேர்த்து, பாதுகாப்பு கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இதில் பாதிக்கப்பட்ட மணமகன் லோகநாதன் தாயார் மல்லிகா, தங்கள் குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், திருமண செலவு செய்துள்ளதாகவும் புகார் கொடுத்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

9 + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi