பொள்ளாச்சி : ஆடிமாத கோயில் விஷேசத்தையொட்டி பொள்ளாச்சி மார்க்கெட்டில் நேற்று அனைத்து ரக வாழைத்தார்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு சில மாதமாக சுற்று வட்டார பகுதி மட்டுமின்றி, தூத்துக்குடி மற்றும் திருச்சி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வாழைத்தார் வரத்து சற்று அதிகமாக இருந்துள்ளது. இருப்பினும், கடந்த சில வாரமாக விஷேச நாட்கள் குறைவால் அனைத்து ரக வாழைத்தார்களின் விலையும் சற்று குறைவாக இருந்தது.
ஆனால், இந்த வாரத்தில் நேற்று நடந்த சந்தையில் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மட்டுமின்றி தூத்துக்குடி,திருச்சி,ஈரோடு உள்ளிட்ட வெளியூர்களிலிருந்தும் வாழைத்தார் வரத்து அதிகமாக இருந்துள்ளது. வாழைத்தார்களின் வரத்து அதிகமாக இருந்தாலும், ஆடி மாத கோயில் விஷேசம் என்பதால் கூடுதல் விலைக்கு விற்பனையானது.
அதிலும், வரும் 24ம் தேதி ஆடி அமாவாசை என்பதால் அனைத்து ரக வாழைத்தார்களும் கூடுதல் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்பட்டது.
இதில், செவ்வாழைத்தார் (ஒரு கிலோ) ரூ.65 முதல் ரூ.75 வரையிலும், கற்பூரவள்ளி ரூ.42க்கும்,பூவந்தார் ரூ.40க்கும், ரஸ்தாளி ரூ.50க்கும், மோரீஸ் ரூ.42க்கும், கேரள ரஸ்தாளி மற்றும் நேந்திரன் ஒரு கிலோ ரூ.45க்கும் என கடந்த வாரத்தைவிட கூடுதல் விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


