சென்னை: உதவி பேராசிரியர் பணிக்கான செட் தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித்துள்ளார். கடந்த 2024ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு செட் தேர்வை நடத்த திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, 2024ம் ஆண்டிற்கான செட் தேர்வு அறிவிப்பை மனோன்மணியம் பல்கலைக்கழகம் மார்ச் 20ம் தேதி வெளியிட்டது. இத்தேர்விற்கு சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.
இதனையடுத்து, ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் செட் தேர்வு நடக்க இருந்தது. ஆனால், ஜூன் 5ம் தேதி தொழில்நுட்ப கோளாறு காரணத்தினால் தேர்வு திடீரென ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், செட் தேர்வை நடத்தும் பொறுப்பை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தமிழ்நாடு அரசு ஒப்படைத்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் செட் தேர்வை 2024-25 முதல் 2026 – 27 வரை, 3 ஆண்டுகளுக்கு நடத்த அனுமதி அளித்து அரசாணை டிசம்பர் 17ம் தேதி வெளியானது. பின்னர் தேர்வு எப்போது நடைபெறும் என தேர்வர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில், மாநில தகுதித் தேர்விற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாநில தகுதித் தேர்வினை (SET) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்த அரசு ஆணையிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, மாநில தகுதித் தேர்வினை வருகிற மார்ச் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி (சிபிடி) வாயிலாக நடத்த தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.gov.in என்ற இணைய தள முகவரியில், தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்னர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.