சென்னை: அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காததால் காவல் துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாட்டின் 76வது சுதந்திர தினம், விஜய தசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29ம் தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி அக்டோபர் 16ம் தேதி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை என்று கூறி காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக வழக்கறிஞர் ரபு மனோகர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று காலை முறையீடு செய்தார். மேலும், இந்த அவமதிப்பு வழக்கை அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டுமென்று கோரினார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய தேதிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. மனுதாக்கல் நடைமுறைகள் முடிந்த பின்னர் விசாரணைக்கு பட்டியலிட்ட பின்னர் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.