சென்ைன: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் மனோ தங்கராஜ் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழக அமைச்சரவையில் இருந்து வனத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி ஆகியோர் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர். போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமிக்கு மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொன்முடி வகித்த வனத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழக அமைச்சரவையில் மனோ தங்கராஜ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கிண்டி ராஜ்பவனில் நேற்று மாலை 6 மணிக்கு நடந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர் மனோ தங்கராஜூக்கு பால்வளத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பால்வளத் துறையை கவனித்துக் கொண்ட நிலையில் மீண்டும் அதே இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட மனோ தங்கராஜுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதேபோன்று மனோ தங்கராஜும் ஆளுநர் மற்றும் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். முன்னதாக பதவியேற்பு விழா மேடையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கைகுலுக்கி சிரித்த முகத்துடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பதவியேற்பு விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முதல்வர் உள்பட 34 பேர் அமைச்சராக உள்ளனர்