சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மணிப்பூர் கடந்த மே முதல் வாரத்தில் இருந்து பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அங்கு மெய்தி மக்களுக்கும், குக்கி பழங்குடியின மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில்தான் அம்மாநிலம் கலவர பூமியாகியுள்ளது. 74 நாட்களுக்கு முன்பு மே 4ம் தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கும்பல் குக்கி இன மக்களை ஆயுதங்களுடன் தாக்கி கொடூரமாக வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தியுள்ளனர். அதில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வீடியோ தேசத்தின் மனசாட்சியை உலுக்கி விட்டது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை படங்கள் நெஞ்சை பதற வைக்கிறது. இதற்கு ஒன்றிய, மாநில பாஜ அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த சம்பவம் இந்தியாவிற்கே அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து உச்ச நீதிமன்றம் கருத்து கூறும்போது ‘மணிப்பூர் சம்பவத்தை ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்தவில்லை என்றால் நாங்களே நேரடியாக தலையிட நேரிடும்’ என எச்சரிக்கை விட்டது. இந்நிலையில் தான் பாராளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் மணிப்பூர் சம்பவத்திற்கு பதில் கூற முடியாமல் சபை கூடுவதற்கு முன்பு பாராளுமன்றத்திற்கு வெளியே பிரதமர் மோடி உரை நிகழ்த்தியிருக்கிறார். கடந்த 2 நாட்களாக எதிர்க்கட்சியினர் மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் விளக்கம் கூற வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியிருக்கிறார்கள். அதற்கு அனுமதி அளிக்கப்படாததால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் விளக்கம் கூற மோடி தயாராக இல்லை. இதன்மூலம் பாராளுமன்ற ஜனநாயகத்தை அவமதித்திருக்கிறார். மணிப்பூர் மாநில பழங்குடியின சகோதரிகளுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து நாடு முழுவதும் தன்னிச்சையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிகழ்வுக்கும், சட்ட ஒழுங்கு சீர்குலைவுக்கும் காரணமான பிரேன் சிங் தலைமையிலான பாஜ அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
இதுதான் எதிர்க்கட்சிகளின் ஒரே கோரிக்கையாகும். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தவறிய மணிப்பூர் மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய கோரியும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் கூறவும் வருகிற 26ம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியினரை கேட்டுக்கொள்கிறேன். மணிப்பூர் சகோதரிகளின் மானபங்கத்திற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்காமல் தப்ப முடியாது. மணிப்பூரில் நடந்த அவமானத்திற்கு பொறுப்பற்ற முறையில் பதில் கூறுகிற பிரதமர் மோடிக்கு உரிய பாடத்தை புகட்டுவதற்காக இந்த ஊர்வலத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று வெற்றிகரமாக நடத்திட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.