Friday, July 11, 2025
Home செய்திகள்உலகம் மணிப்பூர், காஷ்மீர் பயணமா… நோ… நோ… இந்தியாவின் கிழக்கு, மத்திய பகுதிகளுக்கு செல்ல தடை: அமெரிக்க பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு

மணிப்பூர், காஷ்மீர் பயணமா… நோ… நோ… இந்தியாவின் கிழக்கு, மத்திய பகுதிகளுக்கு செல்ல தடை: அமெரிக்க பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு

by Arun Kumar

வாஷிங்டன்: மணிப்பூர், ஜம்மு-காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லைகள், நக்சலைட்கள் நடமாட்டம் உள்ள இந்தியாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா தனது நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.இந்தியா பயணம் குறித்த திருத்தப்பட்ட ஆலோசனை அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் அதிகமாக நடக்கும் குற்றம் மற்றும் பயங்கரவாதம் காரணமாக அங்கு சுற்றுலா செல்லும் அமெரிக்க பயணிகள் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். சில பகுதிகளில் ஆபத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த இந்தியா நிலை 2ல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் பல பகுதிகள் நிலை 4ல் வைக்கப்பட்டுள்ளன. அவை, ஜம்மு மற்றும் காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை, மணிப்பூர் மற்றும் மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் ஆகும்.

இந்த பகுதிகள் கிழக்கு மகாராஷ்டிரா மற்றும் வடக்கு தெலுங்கானாவிலிருந்து மேற்கு மேற்கு வங்கம் வரை நீண்டுள்ளது. அமெரிக்க அரசு ஊழியர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல சிறப்பு அங்கீகாரத்தைப் பெற வேண்டும். வன்முறை மற்றும் குற்ற அச்சுறுத்தல் காரணமாக மணிப்பூருக்குப் பயணிக்க வேண்டாம். அமெரிக்க அரசு ஊழியர்கள் மணிப்பூருக்குச் செல்வதற்கு முன் அனுமதி தேவை. தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், ஒடிசா, சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் பகுதியில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு எதிரான தாக்குதல்கள் அவ்வப்போது நிகழ்கின்றன.

ஒடிசாவின் தென்மேற்கு பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நக்சலைட்டுகள் உள்ளூர் போலீஸ், துணை ராணுவப் படைகள் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளனர். எனவே பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், மேற்கு வங்காளம், மேகாலயா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள பெரும்பாலான பகுதிகளுக்குச் செல்வதற்கு முன் அமெரிக்க அரசு ஊழியர்கள் அனுமதி பெற வேண்டும். மகாராஷ்டிராவின் கிழக்குப் பகுதிக்கும், மத்தியப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதிக்கும் பயணிக்கவும் அனுமதி பெற வேண்டும். அமெரிக்க அரசு ஊழியர்கள் சிக்கிம்,அருணாச்சல பிரதேசம், அசாம், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலைநகரங்களுக்கு வெளியே எந்தப் பகுதிகளுக்குச் செல்லும்போதும் முன் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi