சென்னை: மாம்பழ விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “மா” விலைச் சரிவால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான குரலாய், கடந்த 20.06.2025 அன்று கிருஷ்ணகிரியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமும், திண்டுக்கல்லில் மாபெரும் கண்டன ஆர்பாட்டமும் நடத்தி, “மா” விவசாயிகளின் கோரிக்கைகளை ஒன்றிய , மாநில அரசுகளை அதிமுக நிறைவேற்றக் கோரியது . கர்நாடக மாநில மா விவசாயிகளுக்கு PDPS திட்டத்தின்படி இழப்பீட்டினை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
விவசாயிகள் நலன் காக்கும் நோக்கில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு எடுத்துள்ள இந்த முடிவை வரவேற்பதுடன், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் இத்தகைய இழப்பீட்டை அறிவித்து வழங்க வேண்டும் என ஒன்றிய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். ஆண்டுக்கு ஒருமுறை விளைவிக்கப்படும் “மா” பயிர்களின் விலை வீழ்ச்சியால் சொல்லொண்ணா துயரில் உள்ள விவசாயிகளுக்கு, இந்த இழப்பீடு பெரும் உதவியாக இருக்கும். அஇஅதிமுக என்றும் விவசாயப் பெருங்குடி மக்களுடன் துணை நிற்கும்; அவர்களின் குரலாக என்றென்றும் ஒலிக்கும்! இவ்வாறு தெரிவித்தார்.