Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மானாமதுரை ரயில் நிலையத்தில் மழலைகளுக்காக மீண்டும் சிறுவர் பூங்கா அமைக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மானாமதுரை: மானாமதுரை ரயில் நிலையத்தில் இருந்து சிறுவர் பூங்காவை மீண்டும் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரை ரயில் நிலையம் ராமேஸ்வரம், மதுரை, விருதுநகர், காரைக்குடி ஆகிய நான்கு மார்க்கங்களில் இருந்து ரயில்கள் வரும் சந்திப்பு நிலையமாக ஆங்கிலேயர் காலத்தில் இருந்து செயல்படுகிறது. கடந்த 2007ம் ஆண்டு ஆக.12ம் தேதி மானாமதுரை-ராமேஸ்வரம் இடையே அகலரயில் பாதை திறக்கப்பட்டது. திருச்சி, மதுரை, விருதுநகர் மார்க்கமாக மானாமதுரை ரயில்நிலையம் வழியாக தினமும் 26 ரயில்கள் வந்து செல்கின்றன. இவற்றில் சென்னைக்கு இரவு 7.10 மணிக்கும், 10.20 மணிக்கும் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்கின்றன. இது தவிர வாராந்திர ரயில்களான வாரணாசி, அயோத்தியா, புவனேஸ்வர், ஓகா, திருப்பதி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், எர்ணாகுளம், புதுச்சேரி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு மானாமதுரை வழியாக ரயில்கள் இயக்கப்படுவதால் இந்த ரயில்களில் செல்வதற்கும் மானாமதுரை ரயில்நிலையத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோர் முன்பதிவு செய்கின்றனர்.

இந்த ரயில்நிலையத்தில் முதல் வகுப்பு 2ம் வகுப்பு தங்கும் அறைகள் உள்ளநிலையில், தொலைதூரம் செல்ல குறிப்பிட்ட ரயில்களுக்கு காத்திருக்கும் பயணிகளின் குழந்தைகளுக்கும், மானாமதுரை ரயில் நிலையத்தில் பணி செய்யும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கும் பொழுது ேபாக்க சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டிருந்தது. இந்த பூங்காவில் சறுக்குதளம், பார் கம்பிகள், ஊஞ்சல், நடைபயிற்சி பாதையுடன் மலர்ச்செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2011 க்கு பிறகு இங்கிருந்த விளையாட்டு சாதனங்கள் சேதமானது. அதன்பின் பூங்காவில் கருவேலமரங்கள் வளர்ந்து புதர்மண்டி காணப்பட்ட நிலையில் உடைந்த நிலையில் இருந்த விளையாட்டு சாதனங்கள் இடித்து அகற்றப்பட்டது. இதனால் ரயில்வே தொழிலாளர்களின் குழந்தைகளும், ரயில் பயணிகளின் குழந்தைகளுக்கும் பொழுது போக்க வழியின்றி தவித்து வருகின்றனர். இந்த பூங்காவை சீரமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சண்முகம் கூறுகையில், ‘‘மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகின்றனர். தொலைதூரம் செல்லும் ரயில்களுக்கு காத்திருக்கும் பயணிகளின் குழந்தைகளுக்கும், மானாமதுரை ரயில் நிலையத்தில் பணி செய்யும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கும் பொழுது ேபாக்க சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த பூங்கா அகற்றப்பட்ட நிலையில் ரயில்வே தொழிலாளர்களின் குழந்தைகளும், ரயில் பயணிகளின் குழந்தைகளுக்கும் பொழுது போக்க வழியின்றி தவித்து வருகின்றனர். மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் இந்த பூங்காவை சீரமைக்க நடவடிக்கை வேண்டும்’’ என்றார்.