பெங்களூரு: பெங்களூருவில் நேற்று மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி 2 ஆண்டுகளுக்கு முன்பே ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் இப்போது சாதிவாரி அறிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கின்றனர். இது நல்ல விஷயம் தான் என்பதால் அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு தருவோம். சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள கால அவகாசம் நிர்ணயிக்க வேண்டும். அப்படியில்லையெனில், நீண்டகாலம் ஆகிவிடும். எனவே போதுமான நிதி ஒதுக்கி கால அவகாசமும் நிர்ணயித்தால் தான், குறித்த நேரத்தில் சாதிவாரி அறிக்கை எடுத்து முடிக்கப்படும். எனவே 2-3 மாதங்கள் கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது எனது ஆலோசனை.
இதைத்தொடர்ந்து ஹூப்பள்ளியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, ஒன்றிய அரசு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்கி, அதை 69 சதவிகிதமாக உயர்த்த வேண்டும். தமிழ்நாட்டில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டிற்கு ஏற்ப 69 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் 69 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், அதை மேற்கோள் காட்டி, தமிழ்நாட்டில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டிற்கு ஏற்ப ஒன்றிய அரசு 69 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று கார்கே ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தியிருக்கிறார்.