சென்னை : மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மாநில அரசு தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், மீனவர்கள் பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. இந்த சூழலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் 23-10-2023 அன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை விரைவில் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு தலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28-10-2023) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீன் இறங்குதளத்திலிருந்து, 1-10-2023 அன்று, IND-TN-12-MM-6376 பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள், 23.10.2023 அன்று தினாது தீவு அருகே மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம், மாலத்தீவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட வேண்டுமென்று மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களை,தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.