Saturday, July 12, 2025
Home மகளிர்நேர்காணல் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வழிவிடுங்கள்!

வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வழிவிடுங்கள்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

திருநங்கை என்றாலே யாசகம் கேட்பதும், பாலியல் தொழிலில் ஈடுபடுவதும்தான் அவர்களின் வேலை என்ற கண்ணோட்டம் சமூகத்தில் இன்றளவும் மாறவில்லை. திருநங்கைகள் மீது இந்த பிம்பத்தை வைக்கும் அதே சமூகம் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்கவோ, உருவாக்கித் தரவோ அவ்வளவு எளிதில் முன்வருவதில்லை. சமூகம் வாய்ப்புகளை வழங்க மறுக்கிறது என்று புலம்பிக்கொண்டிருக்காமல் தங்களுக்கான வாய்ப்புகளை தாங்களே உருவாக்கிக்கொண்டிருக்கின்றனர் ‘பார்ன் டூ வின்’ (Born To Win) அமைப்பினை சார்ந்த வீர திருநங்கைகள்.

தொடர்ந்து 15 வருடங்களாக சக திருநங்கைகளின் வளர்ச்சிக்காகவும் உரிமைக்காகவும் பெரிதும் உழைக்கும் அமைப்பின் நிறுவனர் ஸ்வேதா, சென்னை சைதாப்பேட்டை பகுதியில் முதல் ‘ட்ரான்ஸ் பொட்டிக்’ ஒன்றை திறந்திருக்கிறார். இந்த முன்னெடுப்பு குறித்தும் அமைப்பின் பிற செயல்கள் குறித்தும் ஸ்வேதா பகிர்ந்து கொண்டார்.

“பார்ன் டூ வின் அமைப்பு 2012ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. திருநங்கை சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரமளித்தல், சமத்துவம், ஆரோக்கியமான சூழல் ஆகியவற்றை அமைப்பின் மூலம் ஏற்படுத்தி தருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் திருநங்கைகள் தினத்தன்று சாதனைப் படைத்த திருநங்கைகளுக்கு விருதும் வழங்கி அவர்களை கவுரவிக்கிறோம். இந்தியா முழுவதும் 218 திருநங்கைகளை அங்கீகாரம் செய்திருக்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் திருநங்கைகள் தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்த ‘ஃபேஷன் ராம்ப் வாக் ஷோ’ ஒன்றையும் நடத்தி வருகிறோம். இதைத் தவிர ஆண்டுதோறும் ‘கதைப்போமா வாங்க’ என்ற நிகழ்ச்சி நடைபெறும். பல்வேறு போராட்டங்களை கடந்து ஒரு பாதையை அமைத்துக் கொண்ட திருநங்கைகளின் வாழ்க்கை கதைகளை பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சி’’ என்றவர், அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி பொருளாதார உயர்வினையும் செய்து வருகிறார்.

‘‘சூழல் காரணமாக பெரும்பாலான திருநங்கைகள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படுகிறது. படிப்பும் பாதியில் தடைபடுவதால், வேலை கிடைப்பதில்லை. அந்த நிலை மாற வேண்டும் என்று நினைத்தேன். படிப்பு இல்லை என்றால் கைத்ெதாழில் கற்றுக் ெகாள்ளலாமே. தையல் பயிற்சி, ஓட்டுநர் பயிற்சி போன்றவற்றை வழங்குகிறோம். ஓட்டுநர் பயிற்சி அளித்து 50க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தந்திருக்கிறோம். தையல் பயிற்சிகளை முடித்தவர்களுக்கு தையல் இயந்திரங்களை வாங்கி கொடுத்திருக்கிறோம். மேலும், டெய்லரிங் யூனிட் ஒன்றை நடத்துவதால், அதன் மூலம் இவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க முடிகிறது.

சிலர் படிக்க விரும்புவார்கள், அவர்களின் கல்விக்கு உதவுகிறேன். அதில் இருவர் ஃபேஷன் டிசைனிங் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கிறார்கள். திருநங்கைகளின் வளர்ச்சிக்காக நான் தனிப்பட்ட முறையில் முன்னெடுப்புகள் எடுத்து வருகிறேன். மேலும் பல நல்லுள்ளங்கள் உதவியும் செய்கிறார்கள். சில நிறுவனங்கள் அளிக்கும் CSR நிதிகளும் எங்களுக்கு பெரும் ஆதரவாக உள்ளன’’ என்றவர், தையல் பயிற்சி பெற்றவர்களுக்காக ட்ரான்ஸ் பொட்டிக் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

“திருநங்கைக்கு மட்டுமில்லை. அனைவருக்கும் கல்வி இன்றியமையாதது. அது ஒருவரின் வாழ்க்கையை முன்னேற்ற உதவும். பலர் படிச்சாலும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பார்கள். என்னைக் கேட்டால் கிடைக்கும் வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எங்களை எங்களாகவே இருக்கவிடுங்கள் என்பதுதான் சமூகத்தில் நாங்கள் எதிர்பார்க்கும் மாற்றும். எங்களுக்கான வாய்ப்புகளை நாங்க உருவாக்கிக்கொள்ள வழிவிடுங்கள் என்றுதான் கேட்கிறோம். ஒரு குறிப்பிட்ட வட்டத்தை தாண்டி வெளியே வரும் எங்கள் மீதான பொதுவான கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளுங்கள்’’ என்ற ஸ்வேதாவை தொடர்ந்தார் ஓவியா.

‘‘ஸ்வேதா அவர்களின் ெபாட்டிக்கில் தான் நான் வேலை பார்க்கிறேன். நான் வீட்டை விட்டு வெளியே வந்த போது எனக்கு அடைக்கலம் கொடுத்தவர் ஸ்வேதாதான். நானும் அவரின் அமைப்பில் இணைந்தேன். நிறைய உறவுகள் கிடைத்தார்கள். சென்னைக்கு வந்த போது முதலில் ஒரு துணிக்கடையில் வேலை செய்தேன். அமைப்பில் சேர்ந்த பிறகு தையல் பயிற்சி எடுத்தேன். பிளவுஸ், சல்வார், புதுப்புது டிசைன்களில் ஆடைகள் என எல்லாமும் தைப்பேன். இப்போது பொட்டிக்கின் பொறுப்பை என்னிடம் கொடுத்திருப்பதால், பொறுப்பாக பார்த்துக் கொள்கிறேன். அப்சரா பாபி, ஆடையினை வடிவமைத்து தர நான் அதை தைத்து தருவேன். அப்சரா முறையாக ஃபேஷன் டிசைனிங் படித்திருக்கிறார்.

பொட்டிக் திறந்த போது இந்தப் பகுதி மக்களிடம் வரவேற்பு கிடைத்தது. கடை திறந்த சில மாதங்களில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உடைகளை வடிவமைத்து விற்பனை செய்ததால் பலரும் விரும்பி வருகிறார்கள். தரமான ஆடைகளை கொடுக்க வேண்டும் என்பதால், ஒவ்வொரு உடையும் நாங்களே நேரில் சென்று வாங்கி வருகிறோம். ஆன்லைனிலும் விற்பனை செய்கிறோம். மேலும், கண்காட்சியிலும் ஸ்டால்கள் அமைத்து அங்கும் விற்பனைக்கு வைக்கிறோம். தற்போது அடுத்த கட்டமாக பள்ளி சீருடைகள் தைப்பதற்கான ஆர்டரினை பெற முயற்சித்து வருகிறோம். ஒரு பக்கம் மக்கள் எங்களை புரிந்துகொண்டுள்ளனர்.

மறுபக்கம் திருநங்கைகள் நடத்தும் கடையா என முகம் சுழிப்பவர்களும் இருக்கிறார்கள். எங்களிடம் அன்பாக பேசினால் இரண்டு மடங்கு அன்பினை வெளிப்படுத்துவோம். அந்த அன்பிற்காகத்தான் நாங்க ஏங்குகிறோம். இப்போது ஒரு கடையினை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். இதே போல் அமைப்பு சார்பாக பல கடைகள் அமைத்து அதன் மூலம் திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்க அமைப்பின் ஒரே நோக்கம்’’ என்றார் ஓவியா.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi