சென்னை: சென்னை – தாம்பரம் இடையே இரவு நேரத்தில் 4 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை கோட்டத்தில் தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் 200-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினசரி பயணிக்கின்றனர். இதன் காரணமாக, இந்த வழித்தடம் காலை முதல் இரவு 11 மணி வரை பரபரப்பாக இருக்கும். இந்நிலையில், பராமரிப்பு பணி காரணமாக சென்னை – தாம்பரம் இடையே இரவு நேரத்தில் 4 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் புறநகர் மின்சார ரயில் இன்று முதல் அக்டோபர் 17 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் ரயில் இன்று முதல் அக்டோபர் 17 வரை ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு செல்லக்கூடிய மின்சார ரயில், 8ம் தேதியில் இருந்து 15ம் தேதி வரையும், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 11.35 மணிக்கு செல்லக்கூடிய மின்சார ரயில், 8ம் தேதியில் இருந்து 15ம் தேதி வரையும் இரவு நேரத்தில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் வழித்தடத்தில் நடைபெற்று வரும் பணிகள் காரணமாக இரவு நேர ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.