*சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஊட்டி : பராமரிப்பு பணிக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா பெரணி இல்லம் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும்.
மேலும், பல ஆயிரம் தொட்டிகளில் மலர்கள் நடவு செய்யப்பட்டு அவைகள் அனைத்தும் கண்ணாடி மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்கின்றனர். இது தவிர பூங்காவில் பல லட்சம் பெரணி செடிகள் வைக்கப்பட்டுள்ள பெரணி இல்லம் (கண்ணாடி மாளிகை) உள்ளது.
மேலும், பல்லாயிரம் கள்ளிச்செடிகள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை மேல் கார்டன் பகுதியில் உள்ளது. இவை இரண்டும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது அமைக்கப்பட்ட கண்ணாடி மாளிகை. பூங்காவில் உள்ள பெரணி இல்லம் மற்றும் கள்ளிச்செடிகள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை இரண்டுமே வலுவிழந்து சேதம் அடைந்தன.
இதன் மேற்கூரைகளில் உள்ள கண்ணாடிகள் அவ்வப்போது விழுந்து வந்தன.சுற்றுலாப் பயணிகள் இந்த கண்ணாடி மாளிகைக்குள் செல்லும்போது மேற்கூரையில் உள்ள கண்ணாடிகள் விழுந்தால் விபத்து ஏற்படும் என்ற நோக்கில் பெரணி இல்லம் கண்ணாடி மாளிகை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.
இந்நிலையில், இந்த கண்ணாடி மாளிகைகள் சீரமைப்பு பணிகளை தோட்டக்கலைத் துறை துவக்கியது. முதற்கட்டமாக ஊட்டி மேல் கார்டன் பகுதியில் அமைந்துள்ள கள்ளிச் செடிகள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி மாளிகையை சீரமைத்தது.
பூங்கா நுழைவுப் பகுதியில் உள்ள பெரணி இல்லம் கண்ணாடி மாளிகை சீரமைக்கும் பணிகள் கடந்த மார்ச் மாதம் துவக்கப்பட்டு மே மாதம் முடிக்கப்பட்டது. சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில், இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து சுற்றுலா பகுதிகள் பார்வையிட சில நாட்கள் இந்த கண்ணாடி மாளிகை திறக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகளும் உள்ளே சென்று பெரணி செடிகளை கண்டு ரசித்தது மட்டுமின்றி, அதனை புகைப்படமும் எடுத்துச் சென்றனர்.ஆனால் தற்போது, மீண்டும் இந்த கண்ணாடி மாளிகை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் செல்ல தற்போது அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணங்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.