பூந்தமல்லி: மதுரவாயலை அடுத்த நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் முருகன் (42). கட்டிடக்கழிவுகளை தரம் பிரிக்கும் பணி செய்து வருகிறார். இவரது மகன் ஜீவா (19). தந்தைக்கு உதவியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் ஜீவா தனக்கு பைக் வாங்கி தருமாறு பலமுறை தந்தை முருகனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பைக் வாங்கி தரவில்லை. இதனால் கடந்த 8ம் தேதி முருகன் வேலை செய்யும் மதுரவாயல் மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள ஷெட்டிற்கு ஜீவா சென்றுள்ளார்.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து ஊற்றி தீக்குளித்து விடுவேன் என தந்தையை மிரட்டியுள்ளார். அப்போது தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜீவா, கையில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு, அருகே குளிர் காய்வதற்காக மூட்டி வைக்கப்பட்டிருந்த தீயின் அருகே சென்று தீயில் இறங்கிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
அப்போது ஜீவாவே எதிர்பாராத நிலையில் தீப்பொறி சட்டென்று அவரது உடலில் பற்றியது. இதையடுத்து செய்வதறியாத திகைத்த முருகன் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்து ஜீவாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜீவா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.