சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி பேசுகையில், “பூந்தமல்லி தொகுதி நசரத்பேட்டை- திருமழிசை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்ட வேண்டும்’’ என்றார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில்,
“மேம்பாலம் கட்டுவதற்கு சாத்தியக்கூறு ஆராய்ந்து அதற்கு டி.பி.ஆர் தயார் செய்யப்படும். 23 கிலோமீட்டர் நீளத்திற்கு சேவை சாலையுடன் கூடிய 6 வழி சாலை விரிவாக்க செய்ய 495 கோடி பணம் ஒதுக்கப்பட்டு அதன் மூலமாக தேசிய நெடுஞ்சாலை மூலமாக அந்த பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது. தண்டலம் பகுதியிலே மேம்பாலம் மற்றும் நசரத் பேட்டையில் வாகன சுரங்கப்பாதை அமைக்க பணிகள் உள்ளடக்கியதாகத்தான் முதன் முதலாக திட்டம் தீட்டப்பட்டது.
அதற்கு பின்னால் மதுரவாயல் முதல் பெரும்புதூர் வரை சென்னை வெளிவட்ட சாலை எட்டு கிலோமீட்டர் நீளத்தில் உயர்மட்ட சாலை மேம்பாலம் அமைக்க ரூ.1400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. பூந்தமல்லி- பட்டாபிராம் சாலை போக்குவரத்து செறிவு இருந்தாள் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.