உளுந்தூர்பேட்டை: சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 2ம் தேதி காலை மதுரையிலிருந்து சென்னைக்கு மதுரை ஆதீனம் காரில் சென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சேலம் ரவுண்டானா பகுதியில் வந்தபோது, மற்றொரு காருடன் மதுரை ஆதீனத்தின் கார் மோதியது.
இதில் மதுரை ஆதீனத்தின் கார் லேசான சேதம் அடைந்தது. ஆதீனத்திற்கு காயம் ஏதுமில்லை. பின்னர் மதுரை ஆதீனம் சென்னை புறப்பட்டு சென்றதால் காவல் நிலையத்தில் புகார் ஏதும் கொடுக்கப்படவில்லை. எனினும் விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், சென்னையில் ஆதீனங்கள் கலந்து கொண்ட ஒரு விழாவில், மதுரை ஆதீனம் பேசும்போது, ‘நல்லது சொன்னால் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். தன்னை உளுந்தூர்பேட்டை அருகே கொல்ல முயற்சி நடைபெற்றது. இதற்கு பாகிஸ்தான் நாட்டு தீவிரவாதிகள் தொடர்பு உள்ளது’ என்று கூறினார். ஆதீனத்தின் இந்த பேச்சு தமிழ்நாடு முழுவதும் வைரலாகி பரபரப்பானது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் உளுந்தூர்பேட்டை அருகே மதுரை ஆதீனம் சென்ற கார் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. அதில், மதுரையில் இருந்து சென்னை செல்லும் மதுரை ஆதீனத்தின் கார், உளுந்தூர்பேட்டை அடுத்த அஜீஸ் நகர் ரவுண்டானா பகுதியில் உள்ள மேம்பாலத்தின் வழியாக செல்லாமல் மாற்று சாலையில் சென்று உளுந்தூர்பேட்டை நோக்கி செல்கிறார். அப்போது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி மெதுவாக சென்ற கார் மீது மதுரை ஆதீனத்தின் கார் மின்னல் வேகத்தில் மோதியுள்ளது. தவறான பாதையில் மின்னல் வேகத்தில் மதுரை ஆதீனம் கார் சென்றதால் இந்த விபத்து நடைபெற்று உள்ளது. விபத்து நடைபெற்ற இடத்தில் மதுரை ஆதீனத்துடன் வந்தவர்களும் சேலத்தில் இருந்து காரில் வந்தவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி காவல் நிலையத்தில் எந்த புகாரும் அளிக்காமல் புறப்பட்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. ஆனால், தன்னை கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக தவறான தகவலை மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.