மதுரை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மனைவியுடன் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. பயணத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய இருப்பதாகவும், பின் சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் சென்று மாலையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், மறுநாள் காலை உத்தரகோசமங்கை சிவன் கோயிலில் தரிசனம் செய்கிறார் என்றும் கூறப்பட்டது. மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட பிறகு, இன்று மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதனடிப்படையில் போலீசார் தரப்பில் நிகழ்ச்சி நிரல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்கான முன்னேற்பாடுகள் தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஆளுநரின் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட சுற்றுப்பயணம் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினும், சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவியும் இன்று மதியம் 1.30 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை கிளம்பும் விமானத்தில் ஒன்றாக பயணம் செய்ய இருந்தது குறிப்பிடத்தக்கது.


