லக்னோ: மதுரை தீ விபத்தில் உயிர் பிழைத்த 42 சுற்றுலா பயணிகள் உத்தரபிரதேசம் திரும்பியதாக மாநில நிவாரண ஆணையர் தெரிவித்தார். உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென் மாநிலங்களில் சாமி தரிசனம் செய்வதற்காக ஐஆர்சிடிசி சுற்றுலா ரயிலில் 180 பயணிகள் கடந்த 17ம் தேதி தமிழ்நாடு வந்தனர். இவர்கள் பல்வேறு ஆன்மீகத் தலங்களுக்கு சென்று விட்டு, கடைசியாக கடந்த வெள்ளிக்கிழமை திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் தரிசனத்தை முடித்து விட்டு, மதுரைக்கு சனிக்கிழமை அதிகாலை 3.47 மணி அளவில் வந்தடைந்தனர். இவர்கள் வந்த சுற்றுலா ரயில், மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் மதுரை போடி வழித்தடத்தில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ரயில் பெட்டியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகள் கீழே நடைபாதையில் இறங்கி அமர்ந்து இருந்தனர். இந்த நிலையில், ரயிலில் இருந்த பயணிகளில் சிலர் டீ, சமையல் செய்வதற்காக சிலிண்டரை பற்ற வைக்க முயன்ற போது அந்த பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 9 பேர் பலியாகினர். காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து உத்தரபிரதேச மாநில நிவாரண ஆணையர் நவீன் குமார் கூறுகையில், ‘மதுரை ரயில் விபத்தில் உயிர் பிழைத்த 42 உத்தரபிரதேச பயணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி வழியாக 28 பேரும், சென்னை வழியாக 14 பேரும் லக்னோ வந்தடைந்தனர்.
பெங்களூரு வழியாக 8 பயணிகள் லக்னோ வரவுள்ளனர். 5 பயணிகள் தமிழக போலீசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த 9 பேரின் உடல்கள் லக்னோ வந்தடைந்தது’ என்று கூறினார்.