மதுரை: மதுரை அருகே கண்மாயில் 5 வது நாளாக நுரை சாலைக்கு வருவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகளால் திரை போடப்பட்டுள்ளது. மதுரை அவனியாபுரம் அருகே உள்ள அயன்பாப்பாக்குடி கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் தண்ணீர் மூலமாக அவனியாபுரம், வெள்ளக்கல், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் 400 ஏக்கர் பரப்பளவில் பல்வகை பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கண்மாய்களில் ரசாயன கழிவுகளை கொண்டுபோய் கலக்கும் சம்பவங்கள் நடப்பதாக கூறப்பட்ட நிலையில், அயன்பாப்பாக்குடி கண்மாயில் கழிவு நீர் கலந்து 5 தினங்களுக்கு மேல் நுரையாக பொங்கி வருகிறது. இந்த நுரை, விமானநிலையம் செல்லும் சாலையில் காற்றி பறப்பதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மதுரை மாநகராட்சி அதிகாரிகளுக்கு கண்மாயை சரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் திரையை ஏற்படுத்தி நுரையை கட்டுப்படுத்தியுள்ளனர். இதனால் சாலை போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த நுரை தற்போது கட்டுப்படுத்தப்பட்டது.