Friday, July 18, 2025
Home செய்திகள் வங்கி கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட ரூ.100 கோடி மதிப்பு இயந்திரங்களை விற்ற தனியார் சர்க்கரை ஆலைக்கு எதிராக வழக்கு: சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வங்கி கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட ரூ.100 கோடி மதிப்பு இயந்திரங்களை விற்ற தனியார் சர்க்கரை ஆலைக்கு எதிராக வழக்கு: சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

by Francis

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், பழையசீவரத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை (பத்மாதேவி சுகர்ஸ் லிமிட்டெட்), இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 120 கோடி ரூபாயும், மற்ற வங்கிகள், நிதி நிறுவனங்களில் கோடிக்கணக்கான ரூபாயையும் கடனாகப் பெற்றுள்ளது. இந்த கடன்களுக்கு அடமானமாக வைக்கப்பட்டிருந்த ஆலை இயந்திரங்களை, கடன் கொடுத்த வங்கிகளுக்கு தெரியாமல், திருட்டுத்தனமாக விற்று தனியார் சர்க்கரை ஆலை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சிபிஐக்கு புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் புகார் மீது விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு உத்தரவிடக் கோரி நிதி பைனான்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆலைக்கு வழங்கப்பட்ட கடன்கள் வராக்கடன்களாக அறிவிக்கப்பட்டு, அந்நிறுவனத்தின் கணக்கு மோசடி கணக்கு என்று அறிவிக்கப்பட்டு விட்டது. மாநில அரசின் அனுமதியின்றி சிபிஐ வழக்குப்பதிவு செய்வதற்கான உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யமுடியாது என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, நூறு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஆலை இயந்திரங்கள் விற்கப்பட்டு, பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில் வங்கி அதிகாரிகள் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளது. நிதி நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் 3 வாரங்களில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தி சிபிஐ வழக்குப்பதிய வேண்டும். விரிவான விசாரணையை நடத்தி, ஓராண்டில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi