செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயம் அடைந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் குரலரசன் என்பர் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவர் அதே பகுதியில் கடைக்கு சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் சுற்றி திரியும் உடல்நலம் பாதிக்கப்பட்டு அருவருப்பான நிலையில் சுற்றி வந்த தெருநாயை சுடுவதற்கு வெங்கடேசன் என்பவர் திருப்பரணை கிராமத்தை சேர்ந்த நரிக்குறவர் சரத்குமாரை அழைத்துவந்து அவரை கொக்கு சுட பயன்படுத்தும் துப்பாக்கியை கொண்டு தெருநாயை சுட்டுள்ளனர்.
அப்போது அந்த துப்பாக்கியிலிருந்து வெளிவந்த இயக்குண்டுகள் தவறுதலாக அவ்வழியாக சென்ற பள்ளி மாணவன் தலையில் பாய்ந்தது. இதனால் அவர் காயமடைந்தார். சிறுவனை அவரது பெற்றோர் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூடு காரணமாக சித்தாமூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விளாங்காடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் நரிக்குறவர் சரத்குமார் இருவரையும் கைது செய்தனர். இவர்கள் விலங்கை சுட்டது மற்றும் உரிய அனுமதி இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததாகவும் என இருபிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.