மதுராந்தகம்: மதுராந்தகத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் புதியதாக நடவு செய்யப்பட்ட நெற்பயிர் நாற்றுகள், மழைநீரில் அடித்து செல்லப்பட்டதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பெஞ்சல் புயல் காரணமாக, மதுராந்தகம் பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் இடைவிடாது 20 சென்டிமீட்டர் அளவிற்கு கனமழை பெய்தது. இதனால், சாலைகளிலும், வாய்க்கா வரப்புகளிலும் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக, குடியிருப்புகளையும், விவசாய நிலங்களையும் மழைநீர் சூழ்ந்துள்ளது.
இதனால், மதுராந்தகம் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு புதிதாக நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு வாய்க்கால், வரப்பு ஆகிய பகுதிகளில் நெற்பயிர் நாற்றுகள் சிதறி கிடந்துள்ளது. மேலும், விவசாய நிலங்களில் உள்ள மின் கம்பங்களும் சேதமடைந்து காணப்பட்டுள்ளது. இதனைகண்ட விவசாயிகள் கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு, பாதிப்புக்குள்ளாகிய விவசாயிகள், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நெற்பயிர் சேதங்களை, வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சேதமடைந்த மின் கம்பங்களின் சரிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.