திண்டுக்கல்: மடப்புரம் காவலாளி அஜித் மீது நகை திருட்டு புகார் கூறிய நிகிதா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கல்லூரி கல்வி இயக்குநர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருப்புவனம் காளிகோவில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிகிதா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. புகார் கொடுத்த நிகிதா மீது 2011-ம் ஆண்டு முதல் பல்வேறு மோசடி புகார்கள் போலீசில் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் வெளியாகின. திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜாங்கத்திடம் ஆசிரியர் பணிக்காக ரூ11 லட்சம்; ஆலம்பட்டியைச் சேர்ந்த முத்துக்கொடியிடம் சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ2.50 லட்சம்; திருமங்கலம் தெய்வத்திடம் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் என நிகிதா மீது பல கோடி ரூபாய் மோசடி புகார்கள் மீண்டும் குவிந்தன.
அத்துடன் திருமணம் செய்வதாக நடித்து ஏமாற்றிவிட்டு, விவகாரத்து பேப்பரில் கையெழுத்து போட பல லட்சம் வசூல் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்ததாகவும் நிகிதா மீது அவரது முன்னாள் கணவரான தென்னிந்திய பார்வார்டு பிளாக் நிறுவனர் திருமாறனும் தெரிவித்திருந்தார். இதனால் நிகிதா மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. அந்த வகையில், திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தாவரவியல் துறை தலைவராக நிகிதா உள்ளார். இவர் மாணவிகளையும், பேராசிரியர்களையும் தகாத முறையில் பேசியது உள்ளிட்ட புகார்கள் நிகிதா மீது எழுந்துள்ள நிலையில் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.