சென்னை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சென்னை, காமராஜர் சாலையில் ரூ.9 கோடியே 82 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சமூக நல இயக்குநர் அலுவலக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மாநிலத்தின் அனைத்து வளர்ச்சியிலும் பெண்களுக்கு உரிய இடம் வழங்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை என்ற பெயரை “சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை” என மாற்றம் செய்து, பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், திருநங்கையர் போன்றவர்களின் நலனை காத்திடும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
இத்தகைய முக்கியவத்தும் வாய்ந்த சமூக நல இயக்ககத்திற்கு சென்னை, காமராஜர் சாலையில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன், 26,044 சதுர அடி பரப்பளவில் 9 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சமூக நல இயக்குநர் அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கூடுதல் இயக்குநர் கார்த்திகா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.