லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி அபாரமாக ஆடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 18வது தொடரின் 61வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. லக்னோ அணியின் துவக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ், அய்டன் மார்க்ரம் களமிறங்கினர். இந்த இணை சிறப்பாக ஆடி, 10.3 ஓவர்களில் 115 ரன் குவித்த நிலையில், ஹர்ஷ் துாபே பந்தில் மார்ஷ் (39 பந்து, 4 சிக்சர், 6 பவுண்டரி, 65 ரன்) அவுட்டானார்.
அதன் பின், மார்க்ரமுடன் கேப்டன் ரிஷப் பண்ட் இணை சேர்ந்தார். ஆனால், சிறிது நேரத்தில் பண்ட் (7 ரன்), ஈஷன் மலிங்கா பந்தில் அவரிடமே கேட்ச் தந்து வெளியேறினார். பின், நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார். 16வது ஓவரில் ஹர்சல் படேல் பந்தில் மார்க்ரம் (38 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர், 61 ரன்) கிளீன் போல்டாகி வெளியேறினார். 20வது ஓவரில் பூரன் (26 பந்து, 45 ரன்), 20 ஓவர் முடிவில், லக்னோ 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் மலிங்கா 2, தூபே, ஹர்சல் படேல், நிதிஷ் குமார் ரெட்டி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
206 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கியோரில் அதர்வா தெய்டே 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். இருப்பினும் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி 20 பந்துகளில் 59 ரன் குவித்து அவுட் ஆனார். பின் வந்த இஷான் கிஷன் 35 ரன்னில் வீழ்ந்தார். 18வது ஓவரில் கிளாசன் (47) அவுட் ஆனார். 18.2 ஓவரில் சன்ரைசர்ஸ் 206 ரன்கள் குவித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.