ஜமுய்: பீகாரில் 3 வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில் தனது மனைவியை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவரின் செயலை பலரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர். பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆயுஷி குமாரி. இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த விஷால் துபே என்பவருக்கும் கடந்த 2021ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், ஆயுஷிக்கு தனது உறவினரான சச்சின் துபே என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் வெளியே தெரியவர, கடந்த 15ம் தேதி ஆயுஷி தனது காதலன் சச்சினுடன் வீட்டை விட்டு வெளியேறினார். அதிர்ச்சியடைந்த கணவர் விஷால், அப்பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தில் தனது மனைவி காணாமல் போனதாகப் புகார் அளித்தார். பின்னர், ஆயுஷி தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததுடன், தனது மகளையும் தன்னுடன் வைத்துக்கொள்ள மறுத்துவிட்டார். இதையடுத்து, இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன், கடந்த 20ம் தேதி உள்ளூர் கோயில் ஒன்றில் ஆயுஷிக்கும், கள்ளக்காதலன் சச்சினுக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமணத்தின்போது, ஆயுஷியின் முதல் கணவரான விஷாலே சாட்சியாக நின்று அந்த திருமணத்தை நடத்தி வைத்தது அங்கிருந்தவர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து விஷால் துபே கூறுகையில், ‘சச்சின் துபேவுடன் வாழ்வது தான் அவருக்கு (மனைவி ஆயுஷி குமாரி) மகிழ்ச்சி என்றால், அதனை நான் தடுக்க மாட்டேன். ஆனால், என் மீதான அவரது குற்றச்சாட்டுகள் பொய். இனிமேல் அவர் சச்சினின் பொறுப்பு’ என்று கூறியுள்ளார். இந்த விநோத திருமணத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.