தூத்துக்குடி: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ தலைவர் அண்ணாமலை தோல்வியடைந்தால் மொட்டை அடித்து கொள்கிறேன் என மாற்று கட்சி நண்பர்களிடம் சவால் விட்ட அக்கட்சியின் நிர்வாகி, அண்ணாமலை தோல்வியடைந்ததையடுத்து மொட்டையடித்து கொண்டு பஜாரில் வலம் வந்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உடன்குடி ஒன்றிய பாஜ மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு செயலாளராக ஜெயசங்கர் என்பவர் இருந்து வருகிறார்.
இவர், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் என அப்பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதிமுக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள், அப்படி வெற்றி பெறவில்லையென்றால் என்ன செய்வீர்கள் என ெஜயசங்கரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார். வெற்றி பெறவில்லையென்றால் பரமன்குறிச்சி பஜாரில் வைத்து மொட்டையடித்து பஜார் பகுதியில் வலம் வருகிறேன் என சவால் விட்டுள்ளார்.
இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. மேலும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தோல்வியை தழுவினார். இதையடுத்து மாற்று கட்சி நண்பர்களிடம் சவால் விட்டிருந்த ஜெயசங்கர் நேற்று பரமன்குறிச்சி பஜாரில் வைத்து மொட்டையடித்து கொண்டு பஜாரை வலம் வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.