காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் லோக்ஜனசக்தி கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. அதில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள காலை சிற்றுண்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு லோக் ஜனசக்தி கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், இளைஞர் அணி தலைவர் காசிமாறன் வரவேற்றார். பொதுச்செயலாளர் பிரபாகர் தலைமை தாங்கி, 12 தீர்மானங்களை செயற்குழு கூட்டத்தில் வாசித்தார்.
கூட்டத்தில், மாநில தலைவர் வித்யாதரன் பேசியதாவது: சமையல் சிலிண்டர் விலையை குறைத்த மத்திய அரசுக்கு நன்றியும், அதே வேலையில் தமிழகத்திற்கு, நீட்தேர்விற்கு விலக்கு அளிக்கவும், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும். மேலும், மணிப்பூர் கலவரத்திற்கு பிரதமர் நேரில் செல்ல வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் வன்கொடுமை, ஆணவக்கொலை மற்றும் கோயில் நுழைவு நிகழ்வுகளுக்கும் நேரில் முதல்வர் செல்ல வேண்டும்.
இதேபோல், மத்திய அரசு அறிவித்துள்ள விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் பயனாளிகள், எந்த ஜாதிகளை சேர்ந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டு இருப்பது குல கல்வியை ஆதரிப்பதுபோல் உள்ளது.
மேலும், காமராஜர் விருது, நல்லாசிரியர் விருது என அசத்தும் அரசு நடுநிலைப்பள்ளி, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத்தொகை, காலை சிற்றுண்டி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்திய தமிழ்நாடு அரசுக்கும், சந்திரயான்-3 உள்ளிட்ட வெற்றிக்கு பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் லோக் ஜனசக்தி கட்சியின் மாநில செயற்குழு சார்பில் பாராட்டு தெரிவித்து கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இக்கூட்டத்திற்கு 18 மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அனைத்து தரப்பு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் லோகநாதன் நன்றி கூறினார்.