Saturday, May 17, 2025
Home செய்திகள்Showinpage 2 திருமணங்களை முறித்து 3வது நபருடன் லிவிங் டு கெதர் கணவனின் கள்ளக்காதலியை கடத்தி விஷம் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி: சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சம்பவம்

2 திருமணங்களை முறித்து 3வது நபருடன் லிவிங் டு கெதர் கணவனின் கள்ளக்காதலியை கடத்தி விஷம் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி: சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சம்பவம்

by Karthik Yash

போச்சம்பள்ளி: 2 கணவர்களை பிரிந்து தனது கணவனுடன் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்த கள்ளக்காதலியை வீடு புகுந்து தாக்கி வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயன்ற மனைவி கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ஷாலினி (24). நர்சான இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சபரி என்பவருக்கும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான 6 மாத காலத்திற்குள், அதே கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் ஷாலினிக்கு தகாத உறவு ஏற்பட்டது. இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கணவர் சபரியை கைவிட்ட ஷாலினி, பிரகாஷை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இரண்டு வருடம் குடும்பம் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், இரண்டாவது கணவர் பிரகாஷூடனும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து பிரகாஷை பிரிந்த ஷாலினி, குழந்தையுடன் தனிமையில் இருந்து வந்துள்ளார். பின்னர் பிழைப்புக்காக கோயம்புத்தூர் சென்றுள்ளார். அங்கு ஹோம் நர்சாக வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, போச்சம்பள்ளியை சேர்ந்த தம்பிதுரை (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது நாளடைவில் தகாத உறவாக மாறியது. அங்கேயே இருவரும் ‘லிவிங் டு கெதர்’ முறையில் வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். தம்பிதுரை கோவையில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்கிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி நிர்மலா என்ற மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். நிர்மலாவும் அதே அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர்தான். இந்நிலையில் கோவையிலிருந்து சொந்த ஊர் திரும்பி வந்த ஷாலினியும், தம்பிதுரையும் புலியூர் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 2 மாதங்களாக கணவன், மனைவியாக வசித்து வந்தனர். தம்பிதுரை தொடர்ந்து கோவையில் வேலை பார்த்து வந்தார்.

அவ்வப்போது ஊருக்கு வரும் அவர் ஷாலினியுடன் தங்குவார். ஒரு சில நேரங்களில் தனது மனைவி நிர்மலாவின் வீட்டுக்கும் சென்று வருவார். முதலில் நிர்மலாவுக்கு கணவரின் தகாத உறவு பற்றி தெரியாமல் இருந்தது. கடந்த இரண்டு மாதங்களாக கணவரின் நடவடிக்கை மீது நிர்மலாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், கடந்த 13ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கணவர் தம்பிதுரை எங்கே செல்கிறார் என நோட்டமிடுவதற்காக தனது உறவினர்கள் 10 பேருடன் காரில் அவருக்கு தெரியாமல் நிர்மலா பின்தொடர்ந்து சென்றார்.

அப்போது புலியூரில் உள்ள தனது காதலி ஷாலினி வீட்டுக்கு தம்பிதுரை சென்றது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். அங்கு அவரை நிர்மலா மற்றும் உறவினர்கள் கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். அப்போது ஷாலினிக்கும் தம்பிதுரைக்கும் இடையே இருந்த தகாத உறவு தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் இருவரையும் நிர்மலா மற்றும் உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு அங்கு வந்த வீட்டின் உரிமையாளர், இருவரும் கணவன், மனைவி என கூறியதால் வாடகைக்கு வீட்டை விட்டதாகவும், உடனடியாக வீட்டை காலி செய்யும்படியும் கூறியுள்ளார்.

இதையடுத்து அன்றே வீட்டில் இருந்த பொருட்களை காரில் ஏற்றிக்கொண்டு தம்பிதுரை, ஷாலினி மற்றும் குழந்தை ஆகியோரையும் நிர்மலா தரப்பினர் காரில் ஏற்றி சென்றுள்ளனர். காரில் வைத்தும் இருவரையும் தாக்கியுள்ளனர்.
பின்னர் ஆனந்தூர் கிராமத்திற்கு சென்றபோது, நிர்மலா தான் கையில் வைத்திருந்த விஷத்தை வலுக்கட்டாயமாக ஷாலினி வாயில் ஊற்றியதாக தெரிகிறது. இதில் மயங்கி விழுந்த ஷாலினியை 108 ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தம்பிதுரையை மீட்டுச்சென்றனர்.

மருத்துவமனையில் ஷாலினி கொடுத்த தகவலின் அடிப்படையில், போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நிர்மலா மற்றும் 10க்கும் மேற்பட்ட உறவினர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று நிர்மலா மற்றும் தம்பிதுரை ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தம்பிதுரையின் அண்ணி மதினா, சித்தி சுதா மற்றும் அடையாளம் தெரியாத 8பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். உறவினர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சினிமா படத்தில் வரும் காட்சி போல், ஷாலினிக்கு மூன்றாவது கணவருடனும், தம்பிதுரைக்கு இரண்டாவது மனைவியுடனும் இருந்த காதல் குழப்பத்தில் முடிந்தது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கணவர் தம்பிதுரை எங்கே செல்கிறார் என நோட்டமிடுவதற்காக தனது உறவினர்கள் 10 பேருடன் காரில் அவருக்கு தெரியாமல் மனைவி நிர்மலா பின்தொடர்ந்து சென்றார். அப்போது புலியூரில் உள்ள தனது காதலி ஷாலினி வீட்டுக்கு தம்பிதுரை சென்றது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi