புதுடெல்லி: டெல்லியில் தனித்தனியாக வேறு வேறு திருமணம் செய்து கொண்ட பெண்ணும், ஆணும் சேர்ந்து வாழ்ந்தனர். இந்த நிலையில் லிவ் இன் பார்ட்னர் மீது பெண் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வரனா காந்தா சர்மா விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு: இந்த வழக்கில் இரண்டு நபர்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ள தகுதியற்றவர்கள். ஆனால் லிவ்-இன் உறவு ஒப்பந்தத்தின் படி ஒன்றாக வாழ்ந்தவர்கள். அதனால் இந்திய தண்டனைச் சட்டத்தின் 376 பிரிவின்படி (பலாத்காரத்திற்கான தண்டனை) குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வழங்க முடியாது. வெவ்வேறு நபர்களைத் திருமணம் செய்து கொண்ட இரண்டு வயது வந்தவர்களுக்கிடையில் லிவ்-இன் உறவு கிரிமினல் குற்றமாக கருதப்படாது.
இருவரும் தங்கள் வாழ்க்கை துணையை சட்டப்படி விவாகரத்து செய்யவில்லை. அப்படி இருக்கும் போது மனுதாரர் சட்டப்படி அவரை திருமணம் செய்திருக்க முடியாது. அதே போல் பாதிக்கப்பட்ட பெண் வேறொரு துணையுடன் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதன் காரணமாக வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வமாக தகுதியற்றவர். திருமணம் என்ற தவறான சாக்குப்போக்கின் கீழ் பாலியல் உறவுக்கு தூண்டப்பட்டதாகக் கூற முடியாது. எனவே குற்றம் சாட்டப்பட்டவர் மீது பலாத்கார புகார் தெரிவிக்க முடியாது. இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.