கோவில்பட்டி: கோவில்பட்டியில் மாணவியை சக மாணவி காலில் விழ வைத்த தனியார் கல்வி நிறுவன கண்காணிப்பாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி – பசுவந்தனை சாலையில் தனியார் மருத்துவ சான்றிதழ் படிப்பிற்கான கல்வி நிறுவனம் உள்ளது. தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதியை சேர்ந்த மாணவி பாலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உள்பட பலர் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜன. 31ம் தேதி பாலாவுக்கும், சக மாணவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய கல்வி நிலைய கண்காணிப்பாளர் கிருஷ்ண பிரியா, மாணவி பாலாவை கண்டித்து தாக்கியதாகவும், சக மாணவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது மட்டுமின்றி, சமுதாய ரீதியாக அவதூறாக பேசியதாக மாணவி பாலா கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
மேலும், ஒரு லட்சம் ரூபாய் தந்தால்தான் சான்றிதழ்களை தருவதாக கிருஷ்ணபிரியா மிரட்டுகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் கல்வி நிலைய கண்காணிப்பாளர் கிருஷ்ணபிரியா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.