சென்னை: நில அபகரிப்பு போன்ற மோசடிகளை தடுக்க நில பட்டாவுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என நில அளவை மற்றும் தீர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றவும், ஆதார், பான் உள்ளிட்ட தகவல்களை அதனுடன் இணைக்கவும் ஒன்றிய அரசு வலியுறுத்தி உள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களையும் அனுப்பி வைத்து அதனை செயல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கான பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக பட்டா, நில வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை ஆன்லைன் வாயிலாக வழங்கும் பணி செயல்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் தற்போது பட்டா உள்ளிட்ட நில ஆவணங்களில் உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நில அளவை மற்றும் வருவாய்த் துறை முடிவு செய்துள்ளது. தற்போது பட்டாவில் இடம் பெறும் விவரங்களில் உரிமையாளரின் அடையாளத்தை உறுதி செய்ய போதுமான ஆவணங்கள் இல்லை என்பதால் பட்டா உள்ளிட்ட ஆவணங்களில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒருவர் பெயரில் எத்தனை சொத்துக்கள் உள்ளது என்பதை அரசு சார்ந்த துறைகள் தெரிந்து கொள்ள இது உதவும் என்றும் நில அபகரிப்பு போன்ற மோசடிகளை தடுக்க இந்த புதிய முறை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
இது குறித்து நில அளவை மற்றும் தீர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போதைய நிலையில் வெறும் ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருக்கிறது. இதை சிலர் முறைகேடாக பயன்படுத்து தங்களை சட்டபூர்வ நில உரிமையாளராக காட்டிக் கொள்ள நிலை உள்ளது. இதை தடுக்கும் வகையில் கணினி மயமாக்கப்பட்ட நிலப்பதிவோடு ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நில பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் ஆவணங்களை தவறாக பயன்படுத்துவதை தடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புதிய முயற்சி செய்யப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக உண்மையான உரிமையாளர்கள் மட்டுமே பத்திரப்பதிவு பரிவர்த்தனைகளை மேற் கொள்வதை உறுதி செய்ய முடியும். மாநில அரசின் இந்த முன்மொழிவுக்கு ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.