Saturday, December 2, 2023
Home » வாழ்க்கை + வங்கி = வளம்

வாழ்க்கை + வங்கி = வளம்

by Nithya

நன்றி குங்குமம் தோழி

அந்நியச் செலாவணி வர்த்தகம் புரிவதற்கு மத்திய வங்கி இந்திய வங்கிகளுக்கு 1978ல் அங்கீகாரம் வழங்கியது. வெளிநாடுகளில் வாழ்கின்றவர்கள் இந்தியாவிற்கு வரும்போது அல்லது இந்தியாவில் முதலீடு / சேமிப்பு அல்லது வணிகம் செய்ய முனையும்போது இந்திய மண்ணின் சட்டங்களையும், வங்கிகளின் திட்டங்களையும் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். அதேபோல இந்தியாவில் இருந்து கொண்டே அயல்நாடுகளில் முதலீடு அல்லது வணிகம் செய்வோருக்கும் அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகள் குறித்த அனைத்துத் தகவல்களும் தெரிந்திருக்க வேண்டும்.

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA)

வெளிநாடுகளுக்குப் பணம் செலுத்துதல், இந்தியாவில் அந்நியச் செலாவணி சந்தையினை முறையாக ஊக்குவித்து வளர்த்தல் மற்றும் அவற்றின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க இந்திய அரசாங்கம் அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தை 1999ம் ஆண்டு நிறைவேற்றியது. இந்த சட்டம் உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டது. அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகளில் மூலதன கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு என இரண்டு வகைகள் உள்ளன. மூலதன கணக்கு, பணம் தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளையும் உள்ளடக்கியது. நடப்புக் கணக்கு வர்த்தகத்தை சார்ந்தது. இந்தியாவிற்கு வெளியே உள்ள ஒரு குடியிருப்பாளர் தனது சொத்துக்களை வெளிநாட்டில் மாற்றாத அனைத்து பரிவர்த்தனைகளும் நடப்புக் கணக்காகும்.

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 5ன் படி நடப்புக்கணக்கு பரிவர்த்தனைகளுக்காக எந்த ஒரு நபரும் அந்நியச் செலாவணியை வாங்கவோ விற்கவோ தடைகள் இல்லை. ஆனால் அவை மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளுக்காக இருக்கக் கூடாது. இந்தியாவிற்கு வெளியே உள்ள எந்தவொரு நபருக்கும் பணம் செலுத்துதல் அல்லது அத்தகைய நபர்களிடமிருந்து ரசீதுகள், அந்நிய செலாவணி மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் நடைமுறைகளை, கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை கோடிட்டுக் காட்டுவது அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டமாகும். பொதுநலன் அடிப்படையில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நபரின் நடப்பு கணக்கின் கீழ் அந்நிய செலாவணி ஒப்பந்தங்களை மத்திய அரசு கட்டுப்படுத்தலாம்.

இந்தியாவில் வசிப்பவர்கள் அந்நிய செலாவணி, வெளிநாட்டு பாதுகாப்பு அல்லது வெளிநாடுகளில் அசையா சொத்துக்களை வைத்திருத்தல், அவர்கள் இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் போது ஒருவரிடமிருந்து பெறப்பட்ட சொத்து ஆகியவற்றின் பரிமாற்றங்களுக்கான விதிமுறைகளை வகுக்கிறது இந்த சட்டம். அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகளை அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் / வங்கிகள் மூலமாக மட்டுமே மேற்கொள்ளவேண்டும்.

அந்நியச் செலாவணி மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறை சட்டம் வேறுபாடு

அந்நியச் செலாவணி ஒழுங்குமுறை சட்டம் 1998ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் -1999 2000ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது. அந்நியச் செலாவணி ஒழுங்குமுறை சட்டம் அதற்கான விதிகளை அமைத்தாலும், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் வெளிநாட்டுப் பரிவர்த்தனைகள் மற்றும் நாணய பரிமாற்றங்களுக்கான விதிமுறைகளை தளர்த்தியது. அந்நியச் செலாவணி ஒழுங்குமுறை சட்டம் வெளிநாட்டு கொடுப்பனவுகளை ஒழுங்குபடுத்தும்போது, அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் இந்தியாவில் வெளிநாட்டு கொடுப்பனவுகள் மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தை ஊக்குவிப்பதையும் அதன் அந்நிய செலாவணி இருப்பை அதிகரிக்க உதவும்.

பழைய சட்டம் அந்நியச் செலாவணிப் பாதுகாப்பிற்காக இயங்கிய போதிலும், புதிய சட்டம் அந்நியச் செலாவணி மேலாண்மையில் மிகுந்த கவனம் செலுத்துகிறது. அன்னியச் செலாவணி பற்றாக்குறை உள்ள அரிதான ஒன்றாக ஒழுங்குமுறை சட்டம் கருத்தியபோது, அதை நாட்டின் சொத்தாக மேலாண்மைச் சட்டம் வடிவமைத்தது.

மேலாண்மைச் சட்ட விதிமுறைகளின்படி வங்கிகள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள். ஒழுங்குமுறை சட்ட விதிமீறல்கள் கிரிமினல் குற்றமாக கருதப்பட்டன. ஆனால் பின்னர் வந்த சட்டம் விதிமீறல்களை சிவில் குற்றமென்று பட்டியலிட்டது. முதல் சட்டத்தின்படி குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட்டனர். ஆனால் மேலாண்மைச் சட்டம் உடனடியாக அபராதத் தொகையை தீர்ப்பின் மூலம் அறிவித்து 90 நாட்களுக்குள் அதனை செலுத்தவில்லையென்றால் சிறை தண்டனை என வழிவகுக்கும். புதிய சட்டம் அந்நியச் செலாவணியை பாதுகாத்து வைத்தல் என்ற திட்டத்திலிருந்து வெளிநாட்டு வணிகத்தை உயர்த்துதல், நாணய மாற்றை நெறிப்படுத்துதல், அந்நியச் செலாவணிச் சந்தையை மேம்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் என்ற நிலைக்கு நடைமுறைக்கு வந்தது.

அந்நியச் செலாவணி கையிருப்பு

ஒரு நாட்டின் நிதி நிலையில் அந்நியச் செலாவணி கையிருப்பு பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வர்த்தகம் தொடர்பாக பொருளாதாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள ஒரு அளவீடு. வங்கியில் நாம் அந்நியப் பணத்தில், உதாரணமாக அமெரிக்க டாலரில், கணக்கு வைத்திருக்கின்றோம் என்றால் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மேலாண்மையைத் தெரிந்து கொள்வது முக்கியமாகும்.

இது பொதுவாக அமெரிக்க டாலர் மற்றும் குறைந்த அளவில் யூரோ, ஜப்பானிய யென் மற்றும் பவுண்ட் ஸ்டெர்லிங் நாணய இருப்பாக தின இருப்பு நாட்டின் நிலைக்குறிப்பில் பதிவாகும். வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் முதலீட்டின் மதிப்பு பெருமளவில் குறையாமல் பாதுகாக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடியின் போது முதல் முதலீடாக உதவுவது அந்நியச் செலாவணி கையிருப்பாகும். ஒவ்வொரு வங்கியும் அங்கீகரிக்கப்பட்டு அந்நியச் செலாவணி வர்த்தகம் புரிவதால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி தனிநபர்களின் பொருளாதார ஏற்ற, இறக்கமும் அந்நியச் செலாவணி மேலாண்மையை சார்ந்துள்ளது.

முன்பு வங்கியாளர் வெளிநாட்டு ரூபாய் நோட்டுக்கள், பில்கள், வங்கியில் செலுத்தியுள்ள வைப்புகள், அரசாங்கப் பத்திரங்களில் உள்ள முதலீடுகள் ஆகியவைகள் மட்டுமே அந்நியச் செலாவணி இருப்பு என்று கருதப்பட்டன. நடைமுறையில் தங்கம் முதலீடுகள், பன்னாட்டு நிதியக வைப்புகள், ஒரு நாட்டின் சிறப்பு வரைதல் உரிமைகள் ஆகியவையும் அந்நியச் செலாவணி கையிருப்பில் வங்கிகளின் மூலம் நாட்டின் பொருளாதார நிலையை உறுதிப்படுத்துகின்றன. இந்தியா கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்கிறது. நாம் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு பணத்தை டாலரில்தான் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்துவதற்காக எப்போதும் குறிப்பிட்ட அளவுக்கு அந்நியச் செலாவணி கையிருப்பு இருக்க வேண்டும். இந்திய ரூபாயை அங்கீகரிக்கும் நாடுகள் மட்டும்தான் இந்திய பணப்பரிமாற்றத்தை இந்திய நாணயத்தில் ஏற்கின்றன.

நாணய மதிப்பு

ஒரு நாட்டின் நாணயத்தின் மதிப்பு மற்றொரு நாட்டின் நாணய மதிப்பைச் சார்ந்தது. நாணய மாற்று மதிப்பு அளவீடு சர்வதேச சந்தையில் நிர்ணயமாகிறது. இதை ஒப்பீடு மதிப்பு என்பர். நாணய மாற்று மதிப்பு நிலையானதாகவோ அல்லது மிதவை – மாறுதலுக்கு உட்பட்டதாகவோ இருக்கும். சர்வதேச சந்தையின் மதிப்பு அளவீடையொட்டி நாட்டின் மத்திய வங்கி அந்த நாட்டு நாணய மதிப்பை நிர்ணயிக்கிறது. அந்தந்த நாட்டின் அரசியல், பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், நிதி ஆதாரம், வரவு செலவு அறிக்கை, வங்கித் துறையின் கட்டமைப்பு, செயல்பாடு உள்ளிட்ட காரணிகள் நாணய மதிப்பை நிர்ணயிக்கின்றன.

பயணிகளுக்கான அந்நியச் செலாவணி கட்டுப்பாடுகள்

ஈராக் மற்றும் லிபியாவிற்குச் செல்லும் பயணிகள், வெளிநாட்டு நாணயத் தாள்கள் மற்றும் 5000 அமெரிக்க டாலர்களுக்கு மிகாமல் நாணயங்கள் அல்லது ஒரு வருகைக்கு சமமான அந்நியச் செலாவணி வடிவில் பெறலாம். ஈரான் இஸ்லாமியக் குடியரசு, ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் காமன்வெல்த் சுதந்திர நாடுகளின் பிற குடியரசுகளுக்குச் செல்லும் பயணிகள், வெளிநாட்டு நாணயத் தாள்கள் அல்லது நாணயங்களின் வடிவத்தில் முழு அந்நியச் செலாவணியையும் (USD 250,000 வரை) பெறலாம். ஹஜ் / உம்ரா யாத்திரைக்குச் செல்லும் பயணிகளுக்கு, முழுத் தொகை (USD 250,000) ரொக்கமாகவோ அல்லது இந்திய ஹஜ் கமிட்டியால் குறிப்பிடப்பட்ட ரொக்க வரம்பு வரையோ, ADs மற்றும் FFMCகளால் விடுவிக்கப்படலாம்.

மற்ற அனைத்து நாடுகளுக்கும் செல்லும் பயணிகள் ஒரு வருகைக்கு USD 3000 வரை மட்டுமே வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் / நாணயங்களை வாங்க அனுமதிக்கப்படுவார்கள். இருப்புத் தொகையை ஸ்டோர் வேல்யூ கார்டுகள், பயணிகள் காசோலை அல்லது வங்கியாளர் வரைவோலை வடிவில் எடுத்துச் செல்லலாம். இதற்கு விதிவிலக்குகள் இதற்கு அதிகமாக அந்நியப் பணம் வைத்திருப்பவர் அதனை எந்த நாட்டுக்குச் செல்கிறாரோ அந்த நாட்டின் குறியேற்ற அனுமதி வழங்கும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

ஒருவர் வணிகப் பயணம் மேற்கொள்கிறார் என்றால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் / வங்கிகள் வணிகப்பயணம் மேற்கொள்பவருக்கு 25000 டாலர் வரை பணத் தாள்களாக / நாணயமாக வழங்கலாம். வெளிநாட்டுப் பயணத்திற்கு 25,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் அந்நியச் செலாவணியை வெளியிட, ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவை. சர்வதேச மாநாடு, கருத்தரங்கு, சிறப்புப் பயிற்சி, ஆய்வுப் பயணம், பயிற்சிகளில் கலந்துகொள்வது தொடர்பான வருகைகள் வணிக வருகைகளாகக் கருதப்படுகின்றன.

மருத்துவ சிகிச்சைக்காக செல்வதும் இந்த வகைக்குள் அடங்கும். மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டிற்குச் செல்லும் ஒருவர் தனது சிகிச்சைக்காக வெளிநாட்டில் உள்ள மருத்துவர் அல்லது மருத்துவமனை பரிந்துரைத்த தொகை வரை அந்நிய செலாவணியைப் பெறலாம். வெளிநாட்டில் படிக்கும் கல்விக்கான அந்நியச் செலாவணியை வெளிநாட்டில் உள்ள ஒரு நிறுவனம் அல்லது ஒரு கல்வியாண்டிற்கு US$30,000 வரையில் வெளியிடுவதற்கு ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவையில்லை. வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக, அதாவது, சுற்றுலா நோக்கங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட டீலரிடமிருந்து ஏதேனும் ஒரு காலண்டர் வருடத்தில் US$10,000 வரை அந்நியச் செலாவணியைப் பெறலாம்.

US$10,000 என்ற உச்சவரம்பு மொத்தமாகப் பொருந்தும் மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வருகைகளுக்கு அந்நியச் செலாவணி பெறப்படலாம், ஒரு காலண்டர் ஆண்டில் கிடைக்கும் மொத்த அந்நியச் செலாவணியானது US$10,000 என்ற நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பைத் தாண்டாமல் இருந்தால் ஒரு நபர் வேலைவாய்ப்பு அல்லது குடியேற்றம் அல்லது படிப்பு உள்ளிட்டவைகளுக்கு அந்நியச் செலாவணியுடன் சேர்ந்து பெறலாம். இருப்பினும், எந்த நோக்கத்திற்காகவும் நேபாளம் மற்றும் /அல்லது பூட்டானுக்குச் செல்வதற்கு அந்நியச் செலாவணி பெறமுடியாது.

வேலைக்காக வெளிநாடு செல்லும் நபர், இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலரிடமிருந்து 5,000 அமெரிக்க டாலர்கள் வரை அந்நியச் செலாவணியைப் பெறலாம். குடியேற்றத்திற்காக வெளிநாடு செல்லும் நபர் 5,000 அமெரிக்க டாலர்கள் வரை அந்நியச் செலாவணி அல்லது இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலரிடமிருந்து புலம்பெயர்ந்த நாடு நிர்ணயித்த தொகையைப் பெறலாம். இந்த தொகை புலம்பெயர்ந்த நாட்டில் தற்செயலான செலவுகளை சந்திக்க மட்டுமே. தகுதி பெறுவதற்கு அல்லது குடியேற்றத்திற்கான புள்ளிகள் அல்லது வரவுகளை சம்பாதிப்பதற்காக எந்த அந்நிய செலாவணியையும் இந்தியாவிற்கு வெளியே அனுப்ப முடியாது. அத்தகைய பணம் அனுப்புவதற்கு ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவை.

வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருபவர் எந்த வரம்பும் இல்லாமல் அந்நிய செலாவணியை தன்னுடன் கொண்டு வரலாம். இருப்பினும், கரன்சி நோட்டுகள், வங்கி நோட்டுகள் அல்லது பயணிகள் காசோலைகள் போன்றவற்றின் மொத்த மதிப்பு USD 10,000ஐ விட அதிகமாக இருந்தால் அல்லது அதற்கு சமமான வெளிநாட்டு நாணயத்தின் மதிப்பு மட்டும் USD 5,000 அல்லது அதற்கு சமமானதாக இருந்தால், இந்தியா வந்தவுடன், விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகளிடம் நாணய அறிவிப்புப் படிவத்தில் அத்தொகையினை அறிவிக்கப்பட வேண்டும்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?