ஆவடி: வாயைத் திறந்தாலே அண்ணாமலை பொய் பேசுகிறார் என்று அயப்பாக்கத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார். ஆவடியை அடுத்த அயப்பாக்கத்தில் வில்லிவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் பேசியதாவது: உலகத்திலேயே வலிக்காத சவுக்கு கோயம்புத்தூரில்தான் கிடைப்பதாக தெரிவித்தார்கள். அத்தனை அடி அடித்தும் அண்ணாமலைக்கு ஒரு காயம் கூட இல்லை.
செருப்பு போட மாட்டேன் என்றார், ஷூ போட்டு செல்கிறார். வாயைத் திறந்தாலே பொய் பேசுகிறார் அண்ணாமலை. தேசவிரோதி என்று சொல்ல யாருக்கும் தகுதி இல்லை. இந்தியாவில் பிறந்தால் இந்தியன், தமிழ்நாட்டில் பிறந்தால் தமிழன் அவ்வளவுதான். தேசவிரோதி என்று குறிப்பிடுபவரை லூசு என்றுதான் சொல்ல வேண்டும். தேசத்திற்குள் தமிழ்நாடு இல்லையா? தமிழ்நாட்டிற்கு விசுவாசமாக இருந்தாலே அது தேசத்திற்கு விசுவாசமாக இருந்தது போல்தான்.
நான் எந்த கட்சியிலும் இல்லாமல் ஒரு நடிகனாக இந்த அரசின் திட்டங்களை வரவேற்கின்ற முதல்வரின் நண்பனாக இருக்கிறேன். முதல்வர் ஒன்றும் 6 வருடம் காவல் துறையில் இருந்துவிட்டு, அங்கு வேலையைவிட்டு தூக்கி விடுவார்கள் என்று அரசியலுக்கு வந்தவர் அல்ல. இனிமேல் என்னை நகைச்சுவை சக்கரவர்த்தி என்று யாரும் கூற வேண்டாம். அண்ணாமலையை நகைச்சுவை சக்கரவர்த்தி என்று கூறலாம். நடிகர் விஜய்க்கு சினிமா முதலமைச்சர் வேறு, நிஜ முதலமைச்சர் வேறு என்பது தெரியவில்லை.
பாண்டிச்சேரியில் உள்ள ஒருவரை ஆலோசகராக வைத்துள்ளார். இவ்வாறு எஸ்.வி.சேகர் பேசினார். இதில் வினோத் அனைவரையும் வரவேற்றார். ஒன்றியச் செயலாளர் துரை வீரமணி தலைமையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், நடிகர் எஸ்.வி.சேகர், காரம்பாக்கம் கணபதி எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.