Monday, April 21, 2025
Home » பற்களை சுத்தம் செய்தல்… ஸ்கேலிங் அறிவோம்!

பற்களை சுத்தம் செய்தல்… ஸ்கேலிங் அறிவோம்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

பற்களின் ஆரோக்கியம் என்பது உங்கள் உடலின் பொதுவான ஆரோக்கியத்தின் முக்கியமான அங்கமாகும். உங்களுக்கு என்ன வயதானாலும், உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும், மேலும் வைத்துக்கொள்ளவும் முடியும். சரியாக பற்களை நீங்கள் கவனித்துக்கொண்டால், ஆயுள் காலம் முழுவதும் உங்கள் பற்களை நீங்கள் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

ஸ்கேலிங் என்றால் என்ன?

ஸ்கேலிங் மூலம் உங்கள் பற்களையும் ஈறுகளையும் ஆரோக்கியமாகவும் திடமாகவும் வைத்துக்கொள்ளமுடியும். இந்த வழிமுறை, பற்களின் வெளிப்புறத்தில் படியும், கரைகள், ப்லேக் மற்றும் கால்க்யுலஸ் போன்ற கிருமிகளால் பாதிக்கப்பட்ட படிமானங்களை அகற்ற உதவும். இப்படிப்பட்ட படிமானங்கள் ஸ்கேலிங் மூலம் அகற்றப்படாவிட்டால், தொற்றுக்கிருமிகளால் பாதிப்பு ஏற்படுத்துவதுடன் ஈறுகளையும் அழித்துவிடும். இதனால் பயோரியா மற்றும் பற்களின் இழப்பு ஏற்படலாம். ஸ்கேலிங் ஒரு பாதுகாப்பான மற்றும் இயல்பான வழிமுறையாகும். இது பற்களின் மேல்புறத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது. இதை ஒரு பல் நிபுணர் மூலம் தான் செய்து கொள்ள வேண்டும்.

ப்லேக் என்றால் என்ன?

பற்களில் ப்லேக் என்பது, மிருதுவான, பிசுபிசுப்பான, வண்ணமற்ற பாக்டீரியா கிருமிகள் மற்றும் உணவுப்பொருட்களின் படிவம் ஆகும். அது பற்களின் மேல் உருவாகிக்கொண்டே இருக்கும். இந்த படிவத்தின் மேல் அந்த பாக்டீரியாகிருமிகள் குடியேறி வேகமாக பெருகி, ஈருகளில் பாதிப்பை ஏற்படுத்தத் துவங்கும். இதனால் ஈறுகளை தொட்டாலே வலி மற்றும் இரத்தக் கசிவு ஏற்படும். பற்களில் உள்ள ப்லேக்கை 10-14 மணி நேரத்திற்குள் பல்துலக்குவதன் மூலம் சுத்தப்படுத்தாவிட்டால், அது கால்க்யுலஸ் ஆகவோ அல்லது டார்டாராகவோ இறுகிவிடும். கால்க்யுலஸாக உருவாகிவிட்டால், பல் துலக்குவதன் மூலம் அகற்ற முடியாது, பல் நிபுணரால் ஸ்கேலிங் மூலம்தான் அகற்ற முடியும்.

எதற்காக ஸ்கேலிங் செய்யப்படுகிறது?

கவனமாக பல் துலக்கி, பல் இடுக்குகளை சுத்தம் செய்தாலும், உருவாகும் கால்க்யுலஸ் அல்லது டார்டாரை, பல் நிபுணர் மூலம் தொடர்ந்து சுத்தம் செய்துகொள்வது முக்கியம். பல் நிபுணர் மூலம் சுத்தம் செய்வதில் ஸ்கேலிங் மற்றும் பல் பளபளபாக்குதல் உள்ளடங்கும். ஸ்கேலிங் என்பது, பற்களின் வெளிப்புறத்தில் உள்ள, பாதிக்கப்பட்ட படிவங்கள், கால்க்யுலஸ் அல்லது டார்டாரை, நீக்குவதற்கான சாதாரணமான அறுவை சிகிச்சை அல்லாத நிவாரணமாகும்.

இந்த படிவங்கள் அகற்றப்படாவிட்டால், பெரியோடான்டல் நோய் உண்டாவதற்கு வழிவகுக்கும். அனரோபிக் கிருமிகள் வளர இது மிகவும் சரியான சூழ்நிலையை தரும். இந்த கிருமிகள் வேகமாக அபிவிருத்தியாக தொடங்கி, அதிகபட்ச ஈறுகளை பாதிப்படையச் செய்வதுடன் பற்களுக்கு ஆதாரமாக இருக்கும் எலும்புகளை கரைக்க தொடங்கிவிடுகிறது. இது பற்களின் இறுக்கத்தை படிப்படியாக குறைத்துவிடுகிறது. அப்பொழுது பற்களை காப்பாற்றுவதற்கான சிகிச்சை மிகவும் நீண்டதாகவும் மற்றும் பிரச்னைக்குறியதாகவும் ஆகிவிடுகிறது. பற்களை சுற்றியுள்ள திசுக்களை ஆரோக்கியமானதாக்க ஈறுகளில் அறுவைசிகிச்சை தேவைப்படுகிறது.

எவ்வளவு கால இடைவெளியில் ஸ்கேலிங் செய்ய வேண்டும்?

பற்களில் பலேக் உண்டாவது ஒரு தொடர்ச்சியான நிகழ்வாகும். பற்களை துலக்கி இதை நீக்காவிட்டால், 10-14 மணி நேரத்திற்குள் இது டார்டாராக இறுக தொடங்கிவிடுகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை போன்ற சரியான கால அவகாசத்தில் ஸ்கேலிங் தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பற்களை பரிசோதித்துக்கொள்வது மிகவும் நல்லது. உங்கள் பல் மருத்துவர், உங்களுக்கு ஸ்கேலிங் தேவையா? என்று ஆலோசனை வழங்குவார்.

ஆரோக்கியமான பற்களுக்காக வீட்டிலேயே செய்து கொள்ளக்கூடிய சரியான வழிமுறைகளை அவர் எடுத்துரைப்பார். ஸ்கேலிங் செய்வதனால் உங்கள் பற்கள் பலம் இழப்பதில்லை, மாறாக ஈறுகளில் உருவாகும் நோய்களை தவிர்க்கும் என்பதை வலியுறுத்தவேண்டும். மேலும், ஸ்கேலிங் செய்வதன் மூலம் ஈறுகளில் இரத்தக் கசிவு மற்றும் அதை கவனிக்காமல் விடுவதால் ஏற்படும் மற்ற விபரீதமான நோய்கள் மற்றும் ஊடுருவும் ஈறு நோயாக மாறுவதையும் தவிர்க்கலாம்.

இதனால் ஏற்படும் விளைவு

நல்ல வாய் பகுதி சுகாதாரம், பல விதமான பற்கள் மற்றும் ஈறுகளின் நோயை தவிர்ப்பதுடன், அதற்கான சிகிச்சைக்கும் முக்கியமானது. நல்ல வாய் பகுதி சுத்தம் ஆரோக்கியமான வாய்க்கு வழிவகுக்கும். மேலும் வாய்தான் நமது முழு உடலின் நுழைவாயிலாக விளங்குகிறது. ஆரோக்கியமான வாய், பல விதத்திலும் சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கிறது.

தொகுப்பு: லயா

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi