நெல்லை: மாஞ்சோலையில் கோயில் முன்பு ஹாயாக ஓய்வெடுத்த சிறுத்தைக் குட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட அம்பாசமுத்திரம் கோட்டத்தில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதியில் புலி, சிறுத்தை, மிளா, கரடி, யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குள் உள்ளன.
இந்நிலையில் மாஞ்சோலையில் உள்ள வடக்குத்தி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் சிலர் வழிபடச் சென்றுள்ளனர். அப்போது அந்த கோயிலின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகை நிழலில் சிறுத்தைக்குட்டி ஒன்று வெயிலின் தாக்கம் காரணமாக ஓய்வெடுத்துக் கொண்டு இருந்துள்ளது. இதனைக்கண்ட பக்தர்கள் அச்சத்துடன் அமைதியாக மறைந்து நின்று சிறுத்தை ஓய்வெடுப்பதை தங்களுடைய செல்போனில் வீடியோவாக படம் பிடித்து உள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.