சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தபடி, சிறைகளில் உள்ள சிறைவாசிகளின் உணவு மற்றும் அதன் அளவுகளில் நேற்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புழல் மத்திய சிறையில் இந்த திட்டத்தை அமைச்சர் ரகுபதி நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறைத்துறை மானிய கோரிக்கையின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறைவாசிகளின் நலனுக்காக நிபுணர் குழுவின் அறிக்கையின் படி, உணவு முறையில் மாற்றம் மற்றும் உணவின் அளவு அதிகரிக்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.26 கோடி நிதி கூடுதலாக ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்.
முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த திட்டத்தை புழல் மத்திய சிறையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று தொடங்கி வைத்தார். பிறகு சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு புதிய உணவுகள் வழங்கப்பட்டது. சிறைவாசிகளுக்கு நேற்று வழங்கப்பட்ட புதிய உணவின் படி, 2 சப்பாத்தி, சாதம், சாம்பார், கொண்டை கடலை குருமா, ஒரு முட்டை, பொறியல், கேசரி வழங்கப்பட்டது. இந்த புதிய உணவினை சிறைவாசிகள் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி, டிஐஜி முருகேசன், சென்னை சரக சிறைத்துறை எஸ்பிக்கள் கிருஷ்ணராஜ், நிகிலா நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.