‘‘பாஜ கூட்டணியால் அப்செட்டில் உள்ள மாஜி அமைச்சர் பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தில் மீண்டும் மலர்ந்த கூட்டணியால் சைலன்ட்மோடுக்குபோன இலைகட்சி மாஜி மந்திரி எந்த நிகழ்ச்சியிலும் வாய்திறக்கிறது இல்லையாமே என்றபடி வந்தார் நம்ம விக்கியானந்தா… இலைகட்சி மீண்டும் பாஜவுடன் கூட்டணியை புதுப்பித்ததால் மாஜி அமைச்சர்கள் பலர் கடுப்பில் இருக்கிறார்களாம். குறிப்பாக புரம் என்று முடியும் மாவட்டத்தில் பாஜவுக்கு எதிராக அதிகமாக பேசிய மாஜி அமைச்சரோ ரொம்பவும் அப்செட்டில் இருக்கிறாராம். கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது தோல்விக்கு காரணம் பாஜ கூட்டணிதான் என்று வெளிப்படையாகவே விமர்சித்து இருந்தாராம். அதாவது வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கூட்டணி சேர்ந்ததால் களத்தில் எப்படி சந்திப்பது என்று கடும் அப்செட்டில் இருக்கிறாராம். இதனால் எந்த நிகழ்ச்சியிலும் இலைகட்சி மாஜி அமைச்சர் வாய்திறக்க வில்லையாம். செய்தியாளர்களை சந்திப்பதையும் அறவே தவிர்த்து வருகிறாராம். இதனாலே விழாக்களில் பங்கேற்ற இலைகட்சி மாஜி, வாய்திறந்து உளறலுக்கு இடம் கொடாமல் வந்த கையோடு ஓட்டம் பிடித்து விட்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘காக்கி சேதி ஏதுமிருக்கா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் சரகத்துல முன்னாடி இருந்த தலைமை காக்கி அதிகாரிகள் எல்லாருமே, சட்டம்-ஒழுங்கு பிரச்னை, போதை பொருட்கள் கடத்தல், செம்மரக்கடத்தல், பெரிய அளவிலான விபத்துக்கள்னு எது நடந்தாலும் உடனடியாக சம்மந்தப்பட்ட மாவட்ட காக்கிகளை அழைச்சி பேசி நடவடிக்கை எடுப்பாங்க. சில இடங்கள்ல நேர்லையும் போய்ட்டு ஆய்வு செஞ்சி நடவடிக்கை எடுப்பாங்க. ஆனா, இப்ப வேலூர் சரகத்துக்கு வந்திருக்குற தலைமை காக்கி, பெயருக்கு ஏற்றபடிதான் நடந்துக்குறாங்களாம். எந்த பிரச்னையா இருந்தாலும் அவங்களை வெளிய பார்க்க முடியாதாம். அத்தி பூத்தார் போல கடமைக்கு இருக்குறாங்கன்னு காக்கிகள் துறையில இருந்தே பேசிக்கிறாங்க. சென்னையில இருந்து உயர் காக்கிகள் யாராவது வந்தால் மட்டும்தான் இவங்களை வெளிய பார்க்கவே முடியுதாம். மற்றபடி சரகத்துல தலைமை காக்கி இருக்குறாங்களா? இல்லையான்னு கூட தெரியாத நிலைமையா இருக்குதாம். சரக காக்கி இப்படி இருக்குறதால, சில நேரங்கள்ல நேரடியாக மண்டல காக்கி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்குதாம். சரக கட்டமைப்பு வலுவிழந்து இருக்குறதால, மாவட்டங்கள்ல காவல்கட்டமைப்பு வீக்காக இருக்குதாம். இதனால மாநில உயர்காக்கிகள் விசாரிச்சு வேலூர் சரக காக்கிகள் கட்டமைப்பை வலுபடுத்தணும் காக்கிகள் வட்டாரத்துல இருந்தே பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கடைக்கோடி மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதியான மேயரானவருக்கு அரசு நிகழ்ச்சிகளில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது இல்லையாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆமா.. இதில் இதுவரை இருந்து வந்ததும் தற்போது திடீரென்று குறைந்துவிட்டதாம். நிகழ்ச்சிகளில் பத்தோடு பதினொன்றாக தன்னை டீல் செய்கிறார்களே என்று மேயர் மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம். ஏன் இந்த மாற்றம் என்று தொடர்புடையவர்களிடம் கேட்டால் மாவட்ட முக்கிய அதிகாரிதான் இதன் பின்னணியில் இருப்பது தெரியவந்ததாம். அவரை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள் என்பதுதான் காரணமாம். ஆனாலும் மற்ற அதிகாரிகளும் செய்வதறியாது வாய்மூடி மவுனம் காக்கின்றார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி தலைவர் மீதான நம்பிக்கை தகர்ந்து போச்சாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவரின் நாக்கில் சுத்தமில்லை என கட்சிக்காரங்க மட்டுமின்றி, மலராத கட்சியின் தொண்டர்களுக்கும் தெரிஞ்சிப்போச்சாம்… மூச்சுக்கு முன்னூறு தடவை, மலராத கட்சியுடன் கூட்டணியே கிடையாது கிடையாதுன்னு சொன்ன இலைக்கட்சி தலைவரின் பிடி டெல்லிகிட்ட சிக்கிக்கிட்டதாம். இதனால டெல்லிக்கு ஓடிச்சென்று கூட்டணியில சேர்ந்திடுறோம் சாமின்னுட்டு ஓடி வந்தாராம்.. என்றாலும் உடனடியாக கூட்டணியை மறுத்த நிலையில், உள்துறை மந்திரியே மிரண்டு போயிட்டாராம்.. இனிமேலும் அப்படியே விட்டுடக் கூடாதுன்னு சென்னை வந்த உள்துறை மந்திரி, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துவிட்டோம் என பகிரங்கமாக அறிவிச்சதுடன், கூட்டணி மந்திரி சபை அமைப்போமுன்னு அதிரடியா சொல்லிட்டாராம்..
அப்போது மேடையில் அமைதியாக இருந்த இலைக்கட்சி தலைவர் ஐந்து நாட்களுக்கு பிறகு, கூட்டணி ஆட்சி என உள்துறை மந்திரி சொல்லவேயில்லை என சொன்னாராம்.. இதனை கேட்டதும் இலைக்கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி தாமரை தொண்டர்களும் ஷாக்காயிட்டாங்களாம்.. பொதுக்குழு, செயற்குழுவை கூட்டிய இலைக்கட்சி தலைவர், இனிமேல் பாஜவுடன் கூட்டணி கிடையவே கிடையாதுன்னு அறிவிச்சாராம்.. ஆனால் தற்போது பொதுக்குழுவை கூட்டாமல் தன்னிச்சையாக பாஜவுடன் கூட்டணி சேர்ந்துட்டோமுன்னு சொல்லிட்டாராம்.. அதுவும் கூட்டணி மந்திரி சபை என ஊரைக்கூட்டி சொன்னபோது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கூட்டணி மந்திரிசபை இல்லை என கூறுவது என்பது அவர் மீதிருக்கும் நம்பிக்கை தகர்ந்துவிட்டதுன்னும் மலராத கட்சி நிர்வாகிகள் சொல்றாங்க.. அதே நேரத்தில் குக்கர்காரரும், இலைக்கட்சி தலைவரும் கொஞ்சம் நெருங்கி வாராங்களாம்.. இதனால சின்னம்மா ரொம்பவே ஷாக்காயிருக்காங்களாம்.. இதற்கிடையில் வரும் சட்டமன்ற தேர்தலில் இலைக்கட்சி ஆட்சி அமைக்கும் என்பதற்கான எந்த வாய்ப்பும் கடுகளவு கூட இல்லை என தெரிந்தாலும், ஆட்சி அமைப்போம் அதில் இலைக்கட்சி தலைவர் முதல்வராக இருக்க மாட்டார்.. கட்சியை சிறைப்பறவைதான் வழிநடத்துவாங்கன்னு சின்னம்மா கோஷ்டியினர் அடிச்சி சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
இலைக்கட்சி தலைவர் மீது ரெண்டு கட்சியினருக்கும் நம்பிக்கை தகர்ந்துபோனதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
0
previous post