Friday, June 20, 2025
Home செய்திகள் வக்கீல் தற்கொலை செய்த விவகாரம்; உதவியாளராக இருந்த பாமக பெண் பிரமுகர் தற்கொலை: போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்

வக்கீல் தற்கொலை செய்த விவகாரம்; உதவியாளராக இருந்த பாமக பெண் பிரமுகர் தற்கொலை: போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்

by Suresh

சேலம்: மேச்சேரில் தனியாக இருந்த வக்கீல் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவருக்கு உதவியாளராக இருந்த பாமக பெண் பிரமுகரான முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர் தற்கொலை செய்துகொண்டார். சேலம் மாவட்டம் மேச்சேரி அருகேயுள்ள மல்லிகுந்தம் கிழக்கு காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் கோபி (33), வக்கீலான இவர், பத்திர எழுத்தராகவும் இருந்து வந்தார். இவருக்கு மனைவி தமிழ்ரோஜா, 2 மகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம் காலை கோபி, தனது அலுவலகத்திற்கு சென்ற நிலையில், மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால், இரவு 8 மணியளவில் அவரது அலுவலகத்திற்கு மனைவி மற்றும் உறவினர்கள் சென்று பார்த்தனர்.

அங்கு அவர் இல்லாததால், அருகில் அம்மன்நகரில் தனியாக வீடு எடுத்து அவ்வப்போது தங்கிவந்த வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு கோபி தூக்கில் தற்கொலை செய்தநிலையில் சடலமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த மேச்சேரி போலீசார் சம்பவ இடம் சென்று, வக்கீல் கோபியின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அந்த அறையில் இருந்து ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில், `என் இறப்பிற்கு யாரும் காரணமில்லை. எனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலால் தற்கொலை செய்துகொள்கிறேன்’’ என எழுதி கோபி கையெழுத்து போட்டிருந்தார்.

இதையடுத்து அவரது சடலத்தை மேட்டூர் அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்து, நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள், கோபியின் சடலத்தை மல்லிகுந்தம் கொண்டு சென்று அடக்கம் செய்தனர். அப்போது, இறந்த வக்கீலின் பத்திரபதிவு அலுவலகத்தில் அவருக்கு உதவியாளராக பணியாற்றி வந்த குமரேசன் மனைவி பிருந்தா (30) என்பவர் உடனிருந்து கதறியழுதார். பாமக பெண் பிரமுகரான பிருந்தா, மல்லிகுந்தம் பஞ்சாயத்தின் முன்னாள் துணைதலைவராகவும் இருந்துள்ளார். கடந்த ஓராண்டிற்கும் மேலாக வக்கீல் கோபியின் அலுவலகத்தில் அவருக்கு உதவியாளராக பணியாற்றியுள்ளார். கோபி இறந்த துக்கத்தில் வீட்டிற்கு திரும்பிய பிருந்தா நேற்றிரவு திடீரென வீட்டிற்குள் சென்று கதவை சாத்திக்கொண்டுள்ளார்.

சிறிது நேரத்தில் அவரது கணவர் குமரேசன் மற்றும் உறவினர்கள் சென்று பார்த்தபோது, பிருந்தா தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டு, சடலமாக தொங்கினார். உடனே மேச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடம் சென்று, பிருந்தாவின் உடலை மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், வக்கீல் கோபியின் அலுவலகத்தில் ஒரே ஒரு உதவியாளராக பாமக பெண் பிரமுகர் பிருந்தா மட்டும் இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் அவர் அலுவலகத்தில் இருந்தபோது தான், கோபி தனியாக தனது அம்மன்நகர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தற்கொலை செய்துகொண்டநிலையில், அடுத்தநாளான நேற்று முழுவதும் மிகுந்த சோகத்தில் பிருந்தா இருந்துள்ளார். உடல் பிரேதப்பரிசோதனை செய்யும் இடம், அடக்கம் செய்யும் இடம் ஆகிய இடங்களுக்கு சென்ற பிருந்தா, வீட்டிற்கு வந்ததும் தூக்கு மாட்டி தனது உயிரையும் மாய்த்துக்கொண்டுள்ளார், என விசாரணையில் தெரியவந்துள்ளது. அடுத்தடுத்து வக்கீல் மற்றும் அவரது பெண் உதவியாளர் தற்கொலை செய்துகொண்ட இச்சம்பவம் மேட்டூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi