சென்னை: வந்தே பாரத் ரயில் பெட்டிகளை ஆரஞ்சு வண்ணத்துக்கு மாற்ற ரயில்வே துறை திட்டம் இடப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே துறை அதிநவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தி உள்ளது. முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி 2019ம் ஆண்டு டெல்லி- வாரணாசி இடையே தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்தே பாரத் ரயில்கள் விடப்பட்டன. தற்போது நாடு முழுவதும் 26 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுகிறது.
வரும் ஆண்டுக்குள் மேலும் பல வந்தே பாரத் ரயில்களை இந்தியா முழுவதும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ரயில் பெட்டிகள் அனைத்தும் உலக புகழ் பெற்ற சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது வெறும் இருக்கைகள் மட்டுமே கொண்ட இந்த ரயில் விரைவில் படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகளாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத் ரயிலின் அடையாளமாக அதன் வண்ணம் வெள்ளை மற்றும் நீல நிறத்தில் உள்ளது. இதனை ஆரஞ்சு மற்றும் சாம்பல் நிறத்தில் மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரயில் பெட்டிகளின் இருபுறமும் ஆரஞ்சு வண்ணமும், கதவுகளில் சாம்பல் வண்ணமும் இருக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான இறுதி முடிவு இன்னும் எடுக்கவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக ரயில் பயணிகளின் கருத்தும் கேட்கப்பட உள்ளது. அவர்களுக்கு ஆரஞ்சு மற்றும் சாம்பல் நிறத்திலான ரயில் புகைப்படங்கள் அனுப்பப்பட்டு ஆலோசனை நடத்தப்பட உள்ளது. ரயில்வே அமைச்சகம் இதற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் விரைவில் வந்தேபாரத் ரயிலின் வண்ணமும் மாற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். வந்தே பாரத் ரயில் பெட்டிகள் வெள்ளை நிறத்தில் இருப்பதால் அதை பராமரிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. வெள்ளை நிறம் என்பதால் எளிதில் தூசு படிந்து விடுகிறது. இதனால் ஒவ்வொரு முறையும் ரயில் பெட்டிகளை கழுவினாலும் அதனை சுத்தமாக வைத்திருக்க முடியவில்லை. இதை கருத்தில் கொண்டு இந்த வண்ண மாற்றம் வர உள்ளது. ரயில்வே அனுமதி கிடைத்ததும் ரயில் பெட்டிகள் ஆரஞ்சு மற்றும் சாம்பல் கலரில் உருவாக உள்ளது. விரைவில் சென்னை- விஜயவாடா வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.