Thursday, September 21, 2023
Home » நிலமோசடி வழக்கில் இருந்து பத்திர எழுத்தரை விடுவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய திருச்சி டிஎஸ்பி கைது: லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி

நிலமோசடி வழக்கில் இருந்து பத்திர எழுத்தரை விடுவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய திருச்சி டிஎஸ்பி கைது: லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி

by Karthik Yash

திருச்சி: நில மோசடி வழக்கிலிருந்து விடுவிக்க பத்திர எழுத்தரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பியை லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக கைது செய்தனர். திருச்சி மாவட்டம், பூலாங்குடியை சேர்ந்த சிங்கமுத்து மனைவி கீதா (45). பத்திர எழுத்தராக உள்ள இவர், கடந்த 2019ல் திருவெறும்பூரை சேர்ந்த குமார் என்பவருக்கு வீட்டுமனை பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார். ஆனால் பதிவு செய்த வீட்டுமனை சுந்தரம் என்பவருக்கு சொந்தமானது. இதுதொடர்பாக சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவு போலீசார் 2021ம் ஆண்டு குமார் மற்றும் 8 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த குற்ற வழக்கில் பத்திர எழுத்தர் கீதாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும், பத்திர எழுத்தர் கீதாவை விசாரித்து போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், பத்திர எழுத்தர் கீதாவிடம் மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போது டிஎஸ்பி ஆல்பர்ட், கீதாவிடம் குற்றப்பத்திரிக்கையில் பெயர் சேர்க்காமலும், வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு தனக்கு தனியாக ரூ.1 லட்சம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளார். இதில் லஞ்சம் கொடுக்க விரும்பாத பத்திர எழுத்தர் கீதா, திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு நேற்று மதியம் சென்ற பத்திர எழுத்தர் கீதா, அங்கிருந்த டிஎஸ்பியிடம் ரூ.1 லட்சத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் டிஎஸ்பி ஆல்பர்ட்டை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, அலுவலகத்தில் வைத்து டிஎஸ்பியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பின்னர் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு டிஎஸ்பி ஆல்பர்ட்டை ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். லஞ்ச வழக்கில் கைதான டிஎஸ்பி ஆல்பர்ட் சொந்த ஊர் கோவை என்பது குறிப்பிடத்தக்கது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?