மரக்காணம் : மரக்காணம் அருகே கந்தாடு ஊராட்சிக்கு உட்பட்டது காணி மேடு கிராமம். இப்பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள பொது மக்களுக்கு தினமும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க அப்பகுதியில் கடந்த 20 ஆண்டுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இதனை மேற்கொண்டு பராமரிப்பு செய்யவில்லை. இதனால் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் மற்றும் மேல்பகுதி சேதமடைந்து அதில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கீழே விழுகிறது.
இதனால் அந்த தூண்களில் இருக்கும் இரும்பு கம்பிகள் வெளியில் தெரிவதால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரையில் அதிகாரிகள் இந்த குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சரி செய்யவில்லை என குறை கூறுகின்றனர்.
எனவே இப்பகுதி பொதுமக்களின் நலன்கள் கருதி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.